மலையாளத் தயாரிப்பாளருடன் திருமணம் என்பதெல்லாம் சும்மா வதந்தி, ஊடகங்கள் வதந்தியைப் பரப்பிவிடுகின்றன என்கிறார் திரிஷா.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்து 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு, தற்போது 40 வயதாகும் நிலையிலும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஏற்கெனவே அவருக்கு நிச்சயமான திருமணம் ரத்தாகி விட்டது. தொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். திருமணம் எப்போது என்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு எல்லாம் அதற்கான நேரம் வரும்போது தன்னால் நடக்கும் என்று சொல்லி நழுவுகிறார்.
இந்நிலையில், திரிஷாவுக்கும் பிரபல மலையாள தயாரிப்பாளருக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் இரு வீட்டு குடும்பத்தினரும் இது குறித்து பேசி முடிவு செய்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் வலைத்தளத்தில் தீயாக தகவல் பரவி வருகிறது.
தயாரிப்பாளர் பெயர், விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த தகவலை திரிஷா தரப்பு உறுதிப்படுத்தவில்லை.
‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு பிறகு திரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கெனவே ‘லியோ’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அஜித்குமாருடன் ‘விடா முயற்சி’ படத்தில் நடிக்கவும் பேசி உள்ளனர்.

