நானும் அண்ணன் சூர்யாவும் திரைத்துறையில் பணியாற்றுவதை அப்பா சிவக்குமார் விரும்பவில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ள நடிகர் கார்த்தி, “விரைவில் அண்ணனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். அதற்கான கதைத் தேர்வில் நானும் அண்ணனும் சேர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
அண்மையில் தனது அண்ணன் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட நடிகர் கார்த்தி, “திரையுலகில் சகோதரர்கள் ஒரே காலகட்டத்தில் நடிகர்களாக தொடர்ந்து பணியாற்றி வருவது அரிதான ஒன்றுதான்.
“இதுபோல் இணைபிரியாத சகோதரர்களாக இருந்தாலும் கார்த்தியும் சூர்யாவும் இதுவரை இணைந்து ஒரு படத்தில் கூட நடித்ததில்லை.
அதனால், அண்ணனுடன் (சூர்யா) இணைந்து எப்போது நடிக்கப் போகிறீர்கள் என பலரும் கேட்கின்றனர்.
“நானும் அண்ணனும் சேர்ந்து நடிப்பதற்கு ஏதுவான கதைகளை இருவருமே கேட்டு வருகிறோம். முன்பு கூட இதுபோல் நடிப்பதற்கு பயந்தேன். ஆனால், இப்போது இருவரும் உறுதியாக இருக்கிறோம். அதனால் நிச்சயமாக இருவரும் இணைந்து நடிப்போம்,” என மகிழ்ச்சியான தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் கார்த்தி.
“அப்பா எப்பொழுதும் எங்களைப் படங்களில் இருந்து விலக்கி வைத்து விடுவார். நாங்கள் திரைப்படத் துறையில் பணியாற்றுவதை அவர் விரும்பவில்லை. ‘படிக்கவேண்டும், எப்போதும் நன்றாகப் படிக்கவேண்டும், பட்டம் வாங்க வேண்டும்,” என்ற தன் தந்தையின் தாரக மந்திரத்தை நினைவுகூர்ந்தார் கார்த்தி.
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தில் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையின்போது திரைக்கு வரவுள்ள நிலையில், சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார்.
“அனைத்துலக அளவிலான பார்வையாளர்களைக் கவரும் சாத்தியம் இந்த ஜப்பான் படத்துக்கு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். பக்காவான உள்ளூர் சுவையில் அதேசமயம் உலகத்தரத்தில் இதை வழங்க உள்ளோம்,” என்று கூறியுள்ளார் கார்த்தி.