தனது தந்தை கமலுடன் தாம் பாடியுள்ள இசைத்தொகுப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார் நடிகை ஷ்ருதி ஹாசன்.
திரைப்படங்களில் நடித்தபடியே, இசைத்துறையிலும் கவனம் செலுத்தி வரும் ஷ்ருதி, தனது தந்தையின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து இசைத்தொகுப்பு ஒன்றை உருவாக்கி உள்ளார்.
அதில் தானும் இணைந்துள்ளதாகக் கமல் முன்பே தெரிவித்திருந்தார். அந்த இசைத்தொகுப்பை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஷ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ ஆகிய இரண்டு இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் ஷ்ருதி. தற்போது ‘தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, விமான நிலையத்தில் அறிமுகமற்ற ஆடவர் ஒருவர் தம்மைப் பின்தொடர்ந்து வந்ததால் அச்சம் அடைந்ததாகச் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஷ்ருதி.
விமானத்தில் இருந்து இறங்கி, தனது காரில் ஏறும்வரை அந்த ஆடவர் பின்தொடர்ந்து வந்ததாகவும், ‘நீங்கள் யார்’ என்று உரக்கக் கேட்டதும் அவர் சட்டென அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து காவலர்களை நியமிக்கும்படி ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்கள் மூலம் ஷ்ருதி ஹாசனுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.