தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கப்போவது தெரிந்த விஷயம். மிகவும் மாறுபட்ட கதைக்களமும் கதாபாத்திரமும் அமைந்ததால், இயக்குநர் கேட்ட உடனேயே கால்ஷீட் ஒதுக்கிவிட்டார் தனுஷ்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த வாய்ப்பை கைவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளாராம்.
தற்போது, அவர் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 15ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதையடுத்து தனது ஐம்பதாவது படத்தை தாமே இயக்கி வருகிறார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பட வேலைகள் முடிவடைந்த பிறகே சேகர் கம்முலா படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்க இயலும் என்பதால், தனது ஐம்பதாவது படத்தின் படப்பிடிப்பை இடைவெளியோ ஓய்வோ இன்றி நடத்தி வருகிறாராம் தனுஷ்.
இரவு, பகல் பாராமல் அவர் பம்பரமாகச் சுழன்று இயக்குநருக்கான பணிகளைக் கவனித்தபடியே, நடிக்கவும் செய்கிறார். அவரது உழைப்பைக் கண்டு படக்குழுவினர் வியந்து போயுள்ளனர்.