ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்ஜே சூர்யா நடித்து கடந்த மாதம் வெளிவந்த ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வசூல் நூறு கோடி ரூபாயைக் கடந்துள்ளது. மேலும், கடந்த 25 நாள்களாக இப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் எழுபது கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வசூல் ரூ.30 கோடியாக உள்ளது என்றும் படத்தின் தயாரிப்பாளர் வினோத்குமார் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
விஷால் நடித்துள்ள திரைப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டிருப்பது இதுவே முதன்முறை.
இதற்கிடையே ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார் விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள சிற்றூரில் நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்கள் குடிநீர் வசதி இன்றி மிகவும் சிரமப்படுவதாக விஷாலிடம் தெரிவிக்க, உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் விநியோகத்துக்கான மற்ற ஏற்பாடுகளையும் தனது அறக் கட்டளை மூலம் செய்து முடித்துள்ளார் விஷால்.

