சென்னை: திருவேற்காடு நகராட்சியில் தேவி நகர் உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி டெங்கி, மலேரியா காய்ச்சல் பரவுவதாகவும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை நேரில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வியாழக்கிழமை காலை திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் 4 குடங்களில் கொண்டு வந்த கழிவுநீரை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊற்றி கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கழிவுநீர் கால்வாயை தூா்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், அடிப்படை வசதிகள் செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்ததை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.