தமது பார்வையாளர்களை உளவியல் நாடகங்களின் வழி மர்மமும் திகிலும் நிறைந்த கற்பனை உலகிற்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த திரைப் படைப்பாளியான வினய் பரத்வாஜ்.
2019ஆம் ஆண்டு கன்னட மொழியில் வினய்யின் முதல் திரைப்படமான ‘முண்டினா நில்டானா’ வெளியானது. அந்தப் படைப்பால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தார் ‘புன்னகை பூ’ கீதா. அதனால் அவரது நிறுவனம் வினய்யை அணுகி ஒரு தமிழ்ப் படத்தை உருவாக்கக் கேட்டுக்கொண்டது.
‘சில நொடிகளில்’ படத்துக்கான கதையை எழுதும் பணியைத் தொடங்கிய வினய்க்கு, அதை முடிக்க ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆயின. வரும் 24ஆம் தேதி உலகெங்கிலும் வெளியீடு காண உள்ளது இத்திரைப்படம்.
இதில் கீதா, ரிச்சர்ட் ரிஷி (நடிகர் அஜித்தின் மைத்துனர்), யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கொலை, மர்மம் உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாகி உள்ள திரைப்படம் இது.
கதைப்படி அழகு அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ் வரதன் திருமணமானவர். மாயா பிள்ளை என்ற மாடல் அழகி மீது காதல் மலர்கிறது.
இந்நிலையில், அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்கொள்ளும் மாயா திடீரென இறந்துபோகிறார். இதையடுத்து, ராஜ் வரதனால் தன்னைப் பற்றிய ரகசியங்களை தன் மனைவி மேதாவிடம் இருந்து மறைக்க முடிகிறதா, மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடிகிறதா என்பதுதான் ‘சில நொடிகளில்’ படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு செல்ம்ஸ்ஃபெர்ட் என்ற சிறிய நகரில் 35 நாள்கள் நடத்தி உள்ளனர்.
“அனைவருக்கும் மிக ஆழமான, மர்மங்கள் நிறைந்த திரை அனுபவத்தை தரும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது,” என்று உத்தரவாதம் அளிக்கிறார் விஜய்.
பெங்களூரில் பிறந்து தற்போது 40 வயதான இவர், கடந்த 2004ஆம் ஆண்டு MDISல், எம்பிஏ பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
‘மீடியா கார்ப்’பின் ‘சேனல் 5’க்காக, ‘CoffeeShots’ என்ற ஆங்கில இணையத்தொடரை இயக்கி இருந்தார் வினய்.
சிங்கப்பூரில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றிய அவர், யூடியூப்பில் ‘வினய்யுடன் பேசுவோம்’ என்ற நிகழ்ச்சியையும் படைத்துள்ளார்.
கன்னடத்தில் இவர் தொகுத்து வழங்கிய ‘மது கதே வினய் ஜோத்தே’ என்ற ‘டாக் ஷோ’ பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும், ‘கலர்ஸ் டிவி’க்கா ‘சலாம் நமஸ்தே சிங்கப்பூர்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதையடுத்து வட்டார அளவிலும் இவருக்குப் பெயர் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு இந்திய அலைவரிசைகளில் இவர் தொகுத்து வழங்கிப் பங்கேற்ற நிகழ்ச்சிகள் பிரபலமடைந்தன.
‘ஸ்டார் டாக் வினய்’ - ‘சவுத் மீட்ஸ் நார்த்’ நிகழ்ச்சி 130 நாடுகளில் ஒளிபரப்பானது. இதில் வித்யா பாலன், தபு, அதிதி ராவ் ஹைதாரி, நடிகர் ராணா டகுபதி போன்ற இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
கடந்த 2017இல் குறும்படங்களை இயக்கத் தொடங்கியதன் மூலம் திரையுலகில் கால்பதித்த வினய், திரைத்துறை சார்ந்த எந்தப் படிப்பையும் பயிற்சியையும் மேற்கொண்டதில்லை. தனது பணியினூடே திரைப் படைப்பாக்கம் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர்.
“இது விதி என நம்புகிறேன். திரைப்பட உருவாக்கம் என்பது மறுபிறவி எடுப்பது போன்றது. அது ஒரு தெய்வீகமான செயல்முறை அனுபவம் என்று கருதுகிறேன்,” என்று சொல்லும் வினய், சிங்கப்பூரில் இயங்கும் மேவன்டெர் என்ற மின்னிலக்க மார்க்கெட்டிங், கலை நிறுவனத்தின் இணை தோற்றுநராவார்.

