இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர். அவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘தக்லைப்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மணிரத்னம் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினார்.
“ஒரு படம் இயக்கும்போது, சில காட்சிகள் பலவீனமாக இருப்பது நமக்கு தெரிந்துவிடும். ஆனால் எல்லாமே கற்றுக்கொள்வதற்குதான் என்று நினைக்க வேண்டும். ஒரு படத்தில் விட்டதை, அடுத்த படத்தில் நிறைவாக கொடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்,” என்று மணிரத்னம் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் விமர்சனம், கருத்துக்களை கூறமுடியும். ஆனால் இப்போது எதிர்மறையான விஷயங்கள் மட்டுமே சமூக ஊடகங்களில் உலா வருகின்றன என்றார் அவர்.
தென்மாவட்டங்களில் படத்தின் வசூலை யாரும் பார்ப்பதில்லை, கதையை பற்றிதான் யோசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள் என்று சொல்வதை ஏற்கிறேன். ஆனால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் சண்டை போடுவது பார்க்க கஷ்டமாக இருக்கிறது என்று மணிரத்னம் கூறினார்.
அஜித், விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்கள், எனக்கு அஜித்தான் பிடிக்கும், எனக்கு விஜய்தான் பிடிக்கும் என்று சண்டை போடுவது அர்த்தமற்றது. சமூக ஊடகங்களில் நல்ல கேள்விகளை எழுப்பும் பட்சத்தில் பல நல்லது நடக்கும். அதை பலரும் செய்வதில்லை என்பதுதான் வேதனை’‘, என்று மணிரத்னம் குறிப்பிட்டார்.