சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி நிற்க முடிவு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்தக் கால அவகாசத்தை பயன்படுத்தி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.
“சில காலம் எனது கைப் பேசியில் இருந்து விலகி நிற்க முடிவு செய்துள்ளேன். இச்சமயம் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள முடியாது. நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்தி எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகுங்கள்,” என்கிறார் லோகேஷ்.
‘லியோ’ திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு தொய்வு ஏற்பட்டதாக வெளியான விமர்சனங்களைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பான அழுத்தமே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இனிமேல் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் பட வேலைகளைக் கவனிக்க வேண்டும் என முடிவு செய்து இருப்பதாகவும் ‘லியோ’ படத்தின் விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“ஒரு பெரிய படத்தை உருவாக்கும்போது அனைத்து வேலைகளையும் பத்து மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது பெரிய சவால். அந்தப் பத்து மாதங்களில் என்னவெல்லாம் நடந்தன என்பதே தெரியாது.
“திரும்பிப் பார்த்தால் கடந்த நான்கு ஆண்டுகளும் இப்படித்தான் கடந்து போயிருக்கின்றன. எனவே இவ்வளவு வேகம் தேவை இல்லை எனக் கருதுகிறேன்,” என்று லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.