‘சலார்’ படத்தின் தாமதத்திற்கு நான்தான் காரணம்’

‘சலார்’ படத்தின் தாமதத்திற்கு நான்தான் காரணம்’

3 mins read
8cd188f6-5119-42da-92a1-5ae0e297d955
பிரித்விராஜ். - படங்கள்/ செய்திகள்: தமிழக தகவல் சாதனம்.
multi-img1 of 2

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க, நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமானதற்கு தான்தான் காரணம் என்று கூறியிருக்கிறார் பிரித்விராஜ்.

‘சலார்’ திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமையன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியான ஐந்து மொழிகளிலும் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்தது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் பிருத்விராஜ், “சலார் படத்தின் கதை மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பிரபாசைவிட குறைவான முக்கியத்துவம் இருந்தாலும் கதை பிடித்திருந்தது. இதில் நடித்தே ஆக வேண்டுமென முடிவெடுத்தேன்.

ஆனால் எனது ‘ஆடு ஜீவிதம்’ படப்படப்பிடிப்பு தள்ளிப்போகவே ‘சலார்’ படத்துக்கு குறிப்பிட்ட தேதியில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. நான் விலகிவிடுவதாக கூறினேன். இயக்குநர் பிரசாந்த் நீல் எனக்காக காத்திருப்பதாகக் கூறினார்.

“அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு மதிப்பளித்து எனக்காக பல மாதங்கள் காத்திருந்து தாமதமாக படப்பிடிப்பு நடத்தினார். இப்படத்தின் தாமதத்திற்கு நான்தான் முழுக் காரணம்,” எனக் கூறியுள்ளார்.

‘கேஜிஎஃப்’ படத்திற்கும் ‘சலார்’ படத்திற்கும் தொடர்பு இருக்குமா என்று கேட்டதற்கு பதிலளித்த இயக்குநர் பிரசாந்த் நீல், “இரண்டு படங்களுக்கும் இடையே எந்தச் சம்பந்தமுமில்லை. ரசிகர்கள் தாங்களாகவே ஏதேதோ கண்டுபிடித்து சொல்லுகிறார்கள். ஆனால் அது வேறு இது வேறு. இது இரண்டு நண்பர்களுக்கு இடையிலான படம். கான்ஸார் எனும் பகுதியை பற்றியது.

“ஒருவேளை படத்தின் கலர், படம் எடுத்த விதம் மக்களுக்கு அப்படி நினைப்பை தந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

‘சலார்’ படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பொறுத்தவரை ‘கேஜிஎஃப்’ படத்தின் தொடராகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. அதற்கும், இந்தப் படத்துக்கும் தொடர்பில்லை என இயக்குநர் பிரசாந்த் நீல் கூறினாலும் முன்னோட்டக் காட்சி அப்படியில்லை.

‘கேஜிஎஃப்’ படத்தில் தாய் பாசத்தை வைத்து மக்களின் மனதைக் கவர்ந்த பிரசாந்த் நீல் இந்தப் படத்தில் அதனை நட்பாக மாற்றியிருக்கிறார்.

அதே ராஜ்ஜியத்தை பிடிக்கும் கதை. ஒரு கட்டத்தில் நட்பு துரோகமாக மாறுவதை முக்கியமாக எடுத்து இரண்டாம் பாகத்தை தொடங்கும் வாய்ப்பிருப்பதையும் காணொளி உணர்த்துகிறது.

புதுமையில்லாத ஒரேமாதிரியான படம் எடுத்த விதம், கதைக்களம் ஆகிய காரணங்களால் தொடர்ந்து மூன்று தோல்விப் படங்களைக் கொடுத்த பிரபாஸுக்கு இது கைக்கொடுக்குமா? என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

காரணம் ‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு வந்த ‘கப்ஜா’ கன்னடப் படம் அதைப்போலவே இருக்கிறது என்பதால் தோல்வியைத் தழுவியது.

தமிழில் வெளியான ‘மைக்கேல்’ அதே பாணியில் இருந்ததால் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்திசாயம் உண்டு. அப்படிப்பார்த்தால் தன்னுடைய அசல் படத்தையே மீண்டும் நகலாக்க முயற்சித்திருக்கிறாரா பிரசாந்த் நீல் என்பதை பொறுத்திருந்ததான் பார்க்க வேண்டும்.

மேலும், முன்னோட்டக் காட்சியில் மக்களை ஈர்க்கும் பிரமாண்ட காட்சிகள் சிறிது நேரம் பார்வையாளர்களை தக்க வைக்கலாம். ஆனால் தாக்குப்பிடிக்க வைப்பது என்னமோ கதை தான். ‘சலார்’ பிரபாஸுக்கு வெற்றியைத் தேடித்தருமா என்பது நாளை உறுதியாகிவிடும் என்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 2 மணி நேரம், 55 நிமிஷங்கள், 22 நொடிகள் ஓடக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது ‘சலார்’ திரைப்படம்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி