விஜயராஜாக பிறந்து விஜயகாந்த்தான ‘கேப்டன்’ நேற்று உடல்நலமின்றி காலமானார்.
சாமானியனாய் பிறந்து சரித்திரம் படைத்த சாதனை நாயகனாய், சங்கத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் மைந்தனாய், மனம் கவர் நாயகனாய், மங்கா புகழ் கொண்ட கட்சித் தலைவனாய் உருவெடுத்த ‘கேப்டன்’ விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவு தேமுதிக., தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.
செல்வாக்கான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திரைத்துறையில் கதாநாயகனாக நடிக்க விரும்பி 70களின் மத்தியில் சென்னைக்கு வந்தார் விஜயராஜ்.
கதாநாயகனாகவே நடிக்க விரும்பியதால், திரைப்படங்களில் பல சிறு சிறு வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் அனைத்தையும் துணிச்சலாக உதறித் தள்ளினார். இருந்தாலும், ஆரம்பத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு உடனடியாக கிடைக்கவில்லை.
பல போராட்டங்களுக்குப் பிறகு அப்போதைய முன்னணி இயக்குநர்களில் ஒருவரான எம்.ஏ. காஜா இயக்கத்தில் ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். திரைப்படத்திற்காக ‘விஜயகாந்த்’ என மாற்றப்பட்டு காலமெல்லாம் அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது.

