தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகை அமலா பால், தனது காதலர் ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்குத் திருமணமான இரண்டே மாதத்தில் தான் தாய்மை அடைந்துள்ளதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமலாபால்.
இதையறிந்த வலைத்தளவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’ போன்ற படங்களில் நாயகியாக நடித்த அமலா பாலுக்கும் ஏ எல் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது.
கடந்த 2014ல் நடந்த இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவாகரத்தில் முற்றுப் பெற்றது.
திருமணத்திற்குப் பின்பும் நடிப்பதற்கான வாய்ப்பு அமலா பால் வீட்டுக் கதவைத் தட்டவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டினார்.
இதை ஏ.எல். விஜய் குடும்பத்தினர் விரும்பாததே தம்பதியர் பிரிவதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டார்.
அமலாபாலும் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போவதாக நீண்ட நெடு நாள்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், கேரள மாநிலம், கொச்சியிலுள்ள விடுதியில் காதலர் ஜகத் தேசாயை அமலா பால் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார். இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இப்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், “உன்னுடன் 1+1 என்பது 3 என்று இப்போது எனக்குத் தெரியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்
இறுதியாக, அமலா பால் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, ‘கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இணையத் தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார்.