ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளில் வருகையளித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார் தமிழ்த் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன்.
மாநாட்டில் இடம்பெற்ற பற்பல சாவடிகளை ரசிகர் கூட்டம் சூழ பார்வையிட்டு, தொழில்முனைவர்களிடமும் கலைஞர்களிடமும் அவர் பேசினார்.
அவரைக் கண்டதும் ‘செல்ஃபி’ புகைப்படம் எடுத்துக்கொள்ள பலரும் விரைந்தனர். விக்னேஷ் சிவனும் ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்கி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்தார்.
மனைவி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் வந்திருந்தால் அவர்களைச் சூழ்ந்திருக்கக்கூடிய ரசிகர் கூட்டத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவம் வாய்ந்த மொத்தம் 58 பொருள்களுக்குப் புவி சார்ந்த குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அவற்றைக் காட்சிப்படுத்திய சாவடிகளில் விக்னேஷ் சிவன் அதிக நாட்டம் செலுத்தினார்.
இப்பொருள்களைப் பற்றிய மேல்விவரங்களுக்கு https://go.fametn.com/gitagproductcatalogue இணையத்தளத்தைக் காணலாம்.
தமிழ்நாட்டு வணிகங்களில் முதலீடு செய்வது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் புதிதன்று.
சென்ற ஆண்டு அக்டோபரில் சென்னை சார்ந்த ‘டிடுசி’ உணவுத் தொழில்நுட்பத் தொழில் முனைவான ‘த டிவைன் ஃபுட்ஸ்’சில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவரம் குறிப்பிடப்படாத தொகையை முதலீடு செய்தனர்.
மஞ்சள், முருங்கைப் பொடி, சிறுதானியங்கள் போன்ற பொருள்கள் மூலம் ஆரோக்கிய உணவுகளைத் தயாரிக்கும் இவ்வணிகம், தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைக்கான விதை நிதியையும் பெற்றது.
அதற்கு முன்பு ‘சாய் வாலே’ எனும் சென்னை சார்ந்த வணிகத்திலும் முதலீடு செய்தனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியர்.
சென்ற ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூர் தொழில்முனைவர் டேய்சி மோர்கனுடன் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து ‘9ஸ்கின்’ எனும் சருமப் பராமரிப்பு நிறுவனத்தையும் நிறுவினர்.
இதனால் விக்னேஷ் சிவனின் வருகை, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாட்டு வர்த்தகங்களுக்கு நற்செய்தியே.