குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய படம் ‘அயலான்’

குடும்பமாக சென்று பார்க்கக்கூடிய படம் ‘அயலான்’

3 mins read
d139626d-b6e1-45cb-8d18-827fdc762ec5
அயலான் - செய்திகள்/ படங்கள்: தமிழக தகவல் சாதனம்

முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படமாக வெளியாகி இருக்கும் ‘அயலான்’ படத்தைக் குடும்பமாக குறிப்பாக குழந்தைகள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் ‘அயலான்’ படத்தை இயக்கி இருந்தார் இயக்குநர் ஆர்.ரவிக்குமார். அவர் இந்தப் படத்திற்கு முன்பு அறிவியல் கதையான ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கி இருந்தார்.

தமிழ் சினிமாவுக்குத் தரமான அறிவியல் புனைவு சினிமா கொடுத்த ஆர்.ரவிக்குமார், அப்படியொரு தன்னம்பிக்கைக்காரர்தான். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அயலான்’ படத்தின் மூலம் தனது இரண்டாவது அறிவியல் புனைவை மிகுந்த பொறுமையுடன் உருவாக்கியிருக்கிறார்.

வேற்றுக்கிரகவாசிகள் குறித்த கதையைக் கையிலெடுத்தபோது, அதை இன்றைய, ‘பான் இந்தியா’ சினிமாவாகக் கொடுக்க வேண்டும் என்பதற்காக உங்களது ஒரிஜினல் கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததா என்று கேட்டதற்கு, “இல்லை. சினிமாவுக்கென்று ஒரு மொழி இருக்கிறது. எந்த நாட்டில் படம் எடுத்தாலும் அதன் பார்வையாளர்கள் பேசும் மொழி வெவ்வேறாக இருந்தாலும் சினிமாவுக்கான மொழி ஒன்றுதான்.

“அதில் இருக்கும் உணர்வு ஒன்றுதான். ஆனால், கதை என்று வருகிறபோது, உள்ளூர் தன்மை அதிகம் இல்லாமல், எல்லைகளைக் கடந்து, எல்லாப் பகுதி மக்களும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை அமைந்துவிடும்போது, அது மொழி கடந்த சினிமாவாக மாறிவிடும்.

‘அயலான்’ அப்படிப்பட்ட கதையைக் கொண்ட படம்தான். ஹாலிவுட் படங்களின் வெற்றி இந்தச் சூட்சுமத்தில் இயங்குவதுதான். இது வணிகத்துக்காக உருவாக்கப்பட்ட ஓர் உத்தி.

சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்காமல் நடிக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது? என்ற கேள்விக்கு, “நாங்கள் 2018ல் இந்தப் படத்தைத் தொடங்கினோம். அப்போதே சாட்டிலைட், டிஜிட்டல் உட்படப் படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது.

“கொரோனாவுக்கு பிறகுதான் ‘ஓடிடி’யும், ‘பான் இந்தியா’ சினிமாவும் பிரபலம் அடைந்தன. வியாபாரமும் இரண்டு மடங்காக விரிவடைந்தது. இன்று அதிக பட்ஜெட்டும் கிடைக்கிறது. நாங்கள் தொடங்கிய வேகத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டோம்.

“அயலான்’ இன்றைக்கு வியாபாரம் ஆகியிருந்தால் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியிருக்கும். அன்றைக்கே வியாபாரம் முடிந்ததால் பெரிய இழப்புதான்.

“படத்தின் உருவாக்கத் தரத்தில் சமரசம் கூடாது என்பதற்காக சிவகார்த்திகேயன் தனது ஊதியம் முழுவதையும் விட்டுக்கொடுத்துவிட்டார். இது தனது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக அவர் செய்திருக்கும் செயல்”.

“அயலான்’ பற்றிப் பேசும்போது, படத்தில் வரும் வேற்றுக்கிரக வாசியின் தோற்ற வடிவமைப்பு, கிராஃபிக்ஸ் தரம் பற்றி, சமூக ஊடகங்களில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமானது?

“அயலா’னுக்கு கிராஃபிக்ஸ் வி.எஃப்.எக்ஸ் செய்திருப்பவர்கள் ‘பேந்தம் எஃப்.எக்ஸ்’ நிறுவனம். கடந்த 25 ஆண்டுகளாக 200க்கும் அதிகமான ஹாலிவுட், இந்தியப் படங்களுக்கு முதுகெலும்பாக இருந்து ‘வி.எஃப்.எக்ஸ்’ செய்திருக்கும் பிஜாய் அற்புதராஜ் என்கிற ஒரு தமிழரின் நிறுவனம். தலைமையகம் சென்னை அம்பத்தூரில்தான் இயங்குகிறது.

இந்நிறுவனத்துக்கு ஹாலிவுட்டில் அலுவலகம் இருந்தாலும் அங்கிருந்து திரைப்பட இயக்குநர்கள் சென்னைக்கு வந்து செல்கிறார்கள். இந்நிறுவனம் ‘அயலான்’ படத்தின் காட்சிகளைத் தரமாக முடித்துக் கொடுத்தது.

தயாரிப்பாளர் கே.ஜே.ஆரும், பேந்தம் எஃப்.எக்ஸ் நிறுவனமும் சிவகார்த்திகேயனும் ஆளுக்கொரு சக்கரம்போல் இருந்து ‘அயலா’னைக் கடனிலிருந்தும் வழக்குகளிலிருந்தும் மீட்டெடுத்து ரசிகர்களிடம் கொடுத்திருக்கிறார்கள்.

“எனக்கு ஏற்ற ஒத்த அலைவரிசையை உடையவர் பிஜாய். இத்துறையில் அவரது கற்பனை வளம் பல மிகப்பெரிய சாதனைகளை எதிர்காலத்தில் படைக்கும்.

“அவரும் அவரது குழுவினரும் நான் கேட்டதைத் துல்லியமாகக் கொடுத்ததால் இவ்வளவு தரத்தைக் கொண்டுவர முடிந்தது. அத்துடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசையும் ஒளிப்பதிவு யோகி, நீரவ் ஷாவின் கற்பனையும் இணைந்துகொண்டதால் ‘அயலான்’ ரசிகர்களுக்கு முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படமாக வந்திருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்