டாப்சி: கவனம் ஈர்ப்பதே பெரும் சவாலாக உள்ளது

டாப்சி: கவனம் ஈர்ப்பதே பெரும் சவாலாக உள்ளது

3 mins read
77a36d31-5481-45bb-b3cc-f6c221c851da
டாப்சி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்தியத் திரையுலகில் எந்தக் கருத்தையும் துணிச்சலுடன் முன்வைக்கக்கூடிய நடிகைகளின் பட்டியலில் டாப்சிக்கு நிச்சயம் இடம் உண்டு.

சமூக ஊடகங்களில் தனது கருத்துகளை வெளிப்படுத்த அவர் தயங்கியதே இல்லை. இந்நிலையில் இந்தித் திரைத்துறையில் பின்பற்றப்படும் சில நடைமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார் டாப்சி.

இன்றைய தேதியில் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமை, ஓடிடி உரிமை உள்ளிட்ட வியாபாரம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் பிரச்சினைகள் உள்ளன என்றும் தயாரிப்பாளர்களுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் டாப்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறைந்த செலவில் உருவாகும் படங்கள் தரமாக இருந்தால் ஓடிடி நிறுவனங்கள் அவற்றை வாங்க முன்வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட தயாரிப்புச் செலவை ஓரளவு ஈடுகட்ட உதவும்.

“அதே சமயம் ஒரு படத்தை விளம்பரப்படுத்தவும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் ஏற்படக்கூடிய செலவையும் தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டியுள்ளது.’

“படத்தை வாங்கிய ஓ.டி.டி. தளம் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களை மட்டுமே விளம்பரம் செய்கின்றன. இல்லையெனில் சிறு படங்களைக் கண்டு கொள்வதே இல்லை,” என்று சுட்டிக் காட்டுகிறார் டாப்சி.

இத்தகைய போக்கின் காரணமாக சில படங்கள் வெளிவரும் தகவல் ரசிகர்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது என்றும் ஆதங்கப்படுகிறார்.

இதை அடிப்படையாக வைத்து குறைந்த பட்ஜெட் படங்கள் தரமாக இல்லை என்றும் தோல்வி கண்டுவிட்டன என்றெல்லாம் சிலர் முத்திரை குத்தி விடுகின்றனர் என்றும் டாப்சி கூறுகிறார்.

“சில விமர்சகர்களும் இவ்வாறு செய்கின்றனர். தற்போது திரை அரங்குகளிலும் ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான புதுப்படங்கள் வெளிவருகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் படங்களைப் பார்க்கிறார்கள்.

“நல்ல படைப்புகளை சரியான முறையில், உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் படைப்பாளிகளின் உழைப்பிற்கு உரிய பலன், வெற்றி கிடைக்காமல் போய்விடும்.

“கொரோனா நெருக்கடி காலத்திற்குப்பிறகு திரை உலகம் சார்ந்த நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதைக் காட்டிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதுதான் பெரும் சவாலாக உள்ளது என்கிறார் டாப்சி.’

டாப்சியைப் பொறுத்தவரை எந்த மொழிப்படமாக இருந்தாலும் தரமான கதை என்றால் அதில் நடிக்க தயார் என்கிறார். எனினும் சில நிபந்தனைகளையும் அவர் விதிப்பதாக கூறப்படுகிறது.

அதிக ஊதியம் கேட்பதாகவும், குறைந்த நாள்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுப்பதாகவும் டாப்சி குறித்து ஒரு தரப்பினர் குறை கூறுகிறார்கள். அதேசமயம் அவர் கடின உழைப்பாளி, தயாரிப்பாளரின் சிரமங்களை நன்கு புரிந்து கொண்டவர். ரசிகர்களுக்கு நல்ல படைப்புகளை தர வேண்டும் என்று விரும்புகிறவர் என்று மற்றொரு தரப்பு டாப்சியைப் பாராட்டுகிறது.

தமிழில் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்விக்குத் தம்மிடம் பதில் இல்லை என்கிறார் டாப்சி.

“நான் எத்தகைய கொள்கையை பின்பற்றுகிறேன் என்பது என் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். எனது படத்தை திரையரங்கிற்கு வந்து ரசிக்கும் ரசிகர்கள் முழு மனநிறைவோடு வீடு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன்.

“இந்த அனுபவம் ஒவ்வொரு ரசிகருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதனால்தான் கதை கேட்பதில் தொடங்கி ஒரு திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் நான் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்,” என்கிறார் டாப்சி.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்