இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துள்ளது.
‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஹரி, நடிகர் விஷால் மீண்டும் இணைந்துள்ள படம் ‘ரத்னம்’. இந்தப் படமும் சண்டைப் படமாகத்தான் உருவாகி வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான தன்னுடைய படப்பிடிப்பை முடித்துவிட்டார் விஷால். அது குறித்து, “ரத்னம்’ படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டேன். இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாகவும் ஒளிப்பதிவாளர் சுகுமார், மொத்த குழுவுடன் இணைந்து பணியாற்றியது உண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை என ஆரம்பம் முதல் ஒரு நேர்மறையான சூழலில் பணி புரிந்தது வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
“படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் குழுவினருக்கு நன்றி. விரைவில் தேவிஸ்ரீ பிரசாத்தின் அருமையான ஒரு பாடலை வெளியிட உள்ளோம். சண்டைப் படப் பிரியர்களுக்கு இப்படம் கொண்டாட்டமாக இருக்கும்.
“இந்த குடும்பப் பாங்கான படம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் இருக்கும். இது கோடை விடுமுறை பரிசு. விரைவில் பட வெளியீடு பற்றிய அறிவிப்பு வரும். நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என விஷால் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஷால், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம். ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.