தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தாம் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் சமய நல்லிணக்கம் பற்றி அலசும் படைப்பாக உருவாகி உள்ளது என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, தமக்கும் விஜய்க்கும் இடையே போட்டி நிலவுவதுபோல் சில தரப்பினர் பேசுவது மனதுக்கு வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“அண்மையில் நான் கூறிய காக்கா, கழுகு கதையை சிலர் வேறு மாதிரியாக மாற்றிவிட்டனர். விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சிறு வயதில் இருந்தே அவரைப் பார்த்து வருகிறேன்.
“முன்பு ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து தன் மகன் படித்துக் கொண்டிருப்பதாகவும் நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.
“படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அப்போது விஜய்யிடம், ‘உங்களால் முடியுமா’ என்று கேட்டேன். அதற்கு அவர் முடியும் என்று பதிலளித்தார்.
“பின்னர் விஜய் நடிக்கத் தொடங்கி உழைப்பால் உயர்ந்துள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார்,” என்றார் ரஜினிகாந்த்.
விஜய் அரசியலுக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகக் கூறினார்.
விஜய்யை தமக்குப் போட்டியாக நினைத்தால் அது தனக்கு மரியாதை, கௌரவத்தை சேர்க்காது என்றும் ரஜினி குறிப்பிட்டார்.
“என் படத்துக்கு நானே போட்டி என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். விஜய்யும் அப்படித்தான் கூறியுள்ளார். எனவே இருவரது ரசிகர்களும் காக்கா, கழுகு கதையை இப்போதே நிறுத்த வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள்,” என்றார் ரஜினி.
வாழ்க்கையில் நண்பர்களைப் பெற்றிருப்பது மிக முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், நண்பனுக்கும் எதிரிக்கும் பெரிய வித்தியாசங்கள் கிடையாது என்றார்.
“லால் என்றால் சிவப்பு என்று அர்த்தம். சிவப்பு நிறத்துக்கு என பல்வேறு அடையாளங்கள் உள்ளன.
“கம்யூனிஸ்டுகள் அதைப் பயன்படுத்துவார்கள். வன்முறை, புரட்சிக்கும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தலாம். இந்தப் படத்தில் புரட்சிக்காக அதை தேர்வு செய்துள்ளார் ஐஸ்வர்யா.
“லால் சலாம்’ படத்தை ரஜினியே தயாரித்திருக்கலாமே... அவரிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்குமே என்று சிலர் கூறியதாக அறிந்தேன். ‘பாபா’ படத்துக்குப் பிறகு படத் தயாரிப்பு நமக்கு ஒத்துவராது, அந்த ராசி எனக்கு இல்லை என்று நிறுத்திவிட்டேன்,” என்றார் ரஜினி.
‘லால் சலாம்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைகாண உள்ளது.