நடிகை பூர்ணாவை தனது தாயாரைப் போல் கருதுவதாக இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
ஆதித்யா இயக்கியுள்ள ‘டெவில்’ பட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், பூர்ணா வயிற்றில் குழந்தையாகப் பிறக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
“என்னையும் பூர்ணாவையும் சேர்த்து வைத்து சிலர் தவறாகப் பேசுவார்கள். உண்மையில் அவர் எனக்கு தாய் போன்றவர். என் குழந்தையைவிட அவர் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன். அவர் ஒரு நல்ல நடிகை, சாகும்வரை அவர் நடித்துக் கொண்டே பலவற்றைச் சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
“மற்ற படங்களில் அவர் நடிப்பாரா என்று எனக்குத் தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா நடிப்பார்.
“யாரால் கற்பனையான உலகத்தில் நிஜமாகவே வாழ முடிகிறதோ அதுதான் உண்மையான நடிப்பு. அவர்கள்தான் சிறந்த நடிகர்கள். சிலர் அப்படி நடிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. நடிக்கும்போது தன்னுடைய சுயத்தை மறந்து நடிப்பவர்களில் ஒருவர்தான் பூர்ணா,” என்றார் இயக்குநர் மிஷ்கின்.
‘டெவில்’ படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘பெருந்திணை’ பாடல் ஏற்கெனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
“இதற்கு முன்பு பூர்ணா நடித்த ‘சவரக்கத்தி’ படத்துக்கு என் தாயாரை மனதில் வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தேன். அந்தப் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்தது பூர்ணாதான்.
“அவர் என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அடுத்த பிறவியில் அவர் எனது தாயாக இருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்ததுண்டு,” என்று இயக்குநர் மிஷ்கின் மேலும் தெரிவித்துள்ளார்.


