சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் தமக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை அண்மைய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அயலான்’ திரைப்படம் வசூல் ரீதியில் சாதித்துள்ளது. விமர்சகர்களும் படத்தைப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில் ரஜினியும் தன் பங்கிற்கு அப்படத்தையும் சிவாவையும் பாராட்டியுள்ளார்.
இத்தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், “நான் ரஜினியுடன் தொலைபேசியில்தான் பேசினேன். அப்போது, ‘நீங்கள் எப்படி வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறீர்கள்.
“உங்களுடைய படங்கள் ரசிகர்களுக்குப் பிடித்து இருக்கின்றன. எனக்கும்கூட உங்களுடைய படங்கள் மிகுந்த உத்வேகம் அளிக்கின்றன’ என்று பாராட்டினார்.
“பதிலுக்கு அவர் நடித்த ‘எந்திரன்’, ‘2.0’ உள்ளிட்ட படங்கள்தான் எனக்கு உத்வேகம் அளித்தன என்றேன்.
“ஆனால் சூப்பர் ஸ்டாரோ நீங்கள்தான் எனக்கு உத்வேகம் என்று கூறினார். தொடர்ந்து ரசிகர்களுக்கு இதேபோன்ற படங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்,” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.