‘இது மக்கள் மொழியில் சொல்லப்பட்டுள்ள கதை’

‘இது மக்கள் மொழியில் சொல்லப்பட்டுள்ள கதை’

2 mins read
b86f8952-0043-4eeb-b0ff-7c7bf7c63f08
இவானா. - படம்: ஊடகம்

ஜி.வி.பிரகாஷ், இவானா இணைந்து நடிக்கும் ‘கள்வன்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. காடும் காடு சார்ந்த கிராமமும்தான் இப்படத்தின் கதைக்களம்.

“கிராமத்தில் சின்னச் சின்னதாக திருடிக்கொண்டிருக்கும் இரண்டு நண்பர்கள், ஒரு கட்டத்தில் வாழ்க்கை முழுவதுக்கும் தேவைப்படும் பொருள்களைக் குவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

“இதற்காக திட்டமிட்டு செயல்படும்போது இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றின் மூலம் அமையும் நன்மை, தீமைகள், ஒரு கெட்டவன் நல்லவனாக மாறும் சூழ்நிலை என எல்லாமே கதைக்களம்தான்.

“மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி வாழும் மலைக்கிராம மனிதர்களுக்கும் அங்குள்ள வனவிலங்குகளுக்குமான எதிர்கொள்ளலுக்கு முக்கியத்துவம் இருக்கும்,” என்கிறார் அறிமுக இயக்குநர் பி.வி.சங்கர்.

இந்தக் கதையை தம்மால் ஜனரஞ்சகமான படைப்பாக உருவாக்கி இருக்க முடியும் என்றும் அப்படியில்லாமல் நகைச்சுவையாக, சாதனை, சவால்கள், காதல், என மக்கள் மொழியில் கதை சொல்லப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார்.

இப்படத்தின் சுவரொட்டிகள் அண்மையில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. யானைகள், பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் தோட்டங்கள் என பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக ரசிகர்கள் அச்சுவரொட்டிகள் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

‘‘யானைகள் மனிதர்களைத் தாக்கியது என்று அடிக்கடி ஊடகங்களில் படிக்கிறோம். இதன் மூலம் யானைகள் என்றாலே வில்லன்கள் என்பதுபோல் சிலர் சித்திரிக்கின்றனர்.

“உண்மையில் யானை பாசமான ஜீவன். கூடுதல் எடையுள்ள மனிதன் என்று அவற்றைக் குறிப்பிடுவதுதான் சரியாக இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

“யானைகள் பற்றி எவ்வளவோ பேசலாம். அவற்றுக்குச் சின்ன சத்தம் கூட பிடிக்காது. அவற்றைக் கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க இயலாது. அவை விரும்பி நடித்தால்தான் உண்டு. எதற்கும் தீவிர பயிற்சி என்பது அவசியம்.

“நாள் முழுவதும் காட்டுப் பகுதியில் அவற்றின் பின்னே கேமராவைத் தூக்கிக்கொண்டு நடப்பதும் ஓடுவதும் அவ்வளவு எளிதல்ல. கல்லும் முள்ளுமான பாதைகளில் மலையேறிப் பல காட்சிகளைப் படமாக்கினோம். இதற்காக செலவிட்ட நாள்கள் ஏராளம்,” என்று படப்பிடிப்பு அனுபவங்களை விவரிக்கிறார் இயக்குநர் பி.வி.சங்கர்.

நாயகன் ஜி.வி.பிரகாஷும் நாயகி இவானாவும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை நூறு விழுக்காடு அளித்திருப்பதாகப் பாராட்டுபவர், ஜி.வி.பிரகாஷின் பட வரிசையில் ‘கள்வன்’ நிச்சயம் தனி இடம்பெறும் என்கிறார்.

“இவானாவும் எந்தக் குறையும் வைக்கவில்லை. அவரும் ஜி.வி.பிரகாஷும் ஒப்பனையின்றி சிறப்பாக நடித்துள்ளனர். இனி ‘கள்வன்’ இவானா என்று சொல்லும் வகையில் அருமையாக பங்களித்தவருக்கு எதிர்காலத்தில் ஆகச்சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் என நம்புகிறேன்.

“இயக்குநர் பாரதிராஜா, தமக்கு இதைவிட சிறப்பாக கதாபாத்திரம் அமைந்துவிடாது என்று மனநிறைவுடன் சொன்னார். அவருடன் 45 நாள்கள் படப்பிடிப்பில் பங்கேற்றது மிகப்பெரிய அனுபவம்.

“படம் முழுக்க அவரது கொடி பறக்கும். நடிப்புக்கான அத்தனை நுணுக்கங்களும் நிறைந்து காணப்படும் அற்புதமான கலைஞர். யாரை சந்தித்தாலும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர் ‘கள்வன்’ படம் குறித்துதான் அதிகம் பேசுகிறார். இதை எனது மொத்த வாழ்க்கைக்கான பெருமையாகக் கருதுகிறேன்,” என்று குங்குமம் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் சங்கர்.

குறிப்புச் சொற்கள்