நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக நடித்து வருகிறார் சதீஷ். இந்நிலையில் புதுப்படம் ஒன்றில் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம்.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெங்கி இயக்குகிறார்.
விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பொருளை கொள்ளையடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மூன்று வெவ்வேறு குழுக்கள் அதற்காக போட்டியிடுகின்றனர்.
யாருக்கு அந்தப் பொருள் முதலில் கிடைக்கிறது என்பதுதான் கதை. சதீஷ் மேஜிக் நிபுணராக நடித்துள்ளார்.
கொள்ளைக் கும்பலை பிடிக்கப் போராடும் அதிகாரியாகவும் அக்கும்பலின் தலைவனாகவும் என இரண்டு கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார் சதீஷ்.
உண்மையான விமான நிலையத்தில் சில காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். எனினும், அதில் பல சிரமங்கள் இருந்ததால் பின்னர் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடித்தினராம்.
சதீஷூக்கு இது திருப்புமுனை ஏற்படுத்தும் படைப்பாக அமையும் என்கிறார் இயக்குநர் வெங்கி. வரும் 23 ஆம் தேதி இந்தப் படம் திரைகாண உள்ளது.

