ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ திரைப்படம் எதிர்வரும் 16ஆம் தேதி வெளியாகிறது.
இதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜெயம் ரவி, படத்தின் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
“ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டிய தருணத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். இதை அழுத்தமாகச் சொல்லும்படம் இது. இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் நடித்த அனுபவத்தை மறக்க இயலாது.
“கோமாளி’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் யோகி பாபு தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை எனது கதாபாத்திரத்துடன் பயணம் செய்வார்.
“இயக்குநரை முழுமையாக நம்பியதால் எதிலும் தலையிடவில்லை. இயக்குநர்கள்தான் வாய்ப்புகள் கொடுத்து நம்மை கைதூக்கி விடுகிறார்கள், வளர்க்கிறார்கள்.
“அவர்களின் உழைப்பு, திறமையை நமக்காகத் தருகிறார்கள். அவர்கள் கொடுத்த வேலைகளைச் செய்யும் வெறும் கருவிதான் நான்,” என்றார் ஜெயம் ரவி.

