ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘லால் சலாம்’ திரைப்படம் திரையரங்கில் கூட்டம் இல்லாததால் விரைவில் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து இருக்கின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இதுதவிர விஷ்ணு விஷால், விக்ராந்த், நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
ரஜினிகாந்த் நடித்திருந்ததால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் வெளியான பின்னர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் ‘லால் சலாம்’ படம் முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட திரையரங்குகளில் ஆள்கள் இல்லாமல் ஓடியது.
ரூ.40 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் மொத்த வசூல் இதுவரை ரூ.20 கோடியை கூட எட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்படமும் ஐஸ்வர்யாவின் தோல்வி பட வரிசையில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் ‘லால் சலாம்’ திரைப்படத்தை வேறு வழியின்றி ஓடிடிக்கு விற்றுவிட்டது லைகா நிறுவனம். அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது.
அந்நிறுவனம் இப்படத்தை மார்ச் 8ஆம் தேதி ஓடிடியில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது