இசையமைப்பாளர் அனிருத் தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் இளமை துள்ளும் இசையமைப்பாளர், பாடகர் அனிருத் ரவிச்சந்தர், மிகச் சிறிய வயதிலேயே வெற்றியை எட்டிப் பிடித்தவர், இளைஞர்களின் நாடி பிடித்து இசையமைப்பவர். இளைஞர்களுக்கு குறிப்பாக பெண் ரசிகர்கள் அனிருத்திற்கு எப்போதுமே உண்டு.
இவருடைய இசையில் அண்மையில் வெளிவந்த படம் ஷாருக்கான் நடித்திருந்த ஜவான். அந்தப் படத்தில் இவருடைய இசை பலரையும் கவர்ந்தது. அதன்பின் அவர் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதற்கிடையே ‘ஹூக்கும் மியூசிக் கான்சர்ட்’டையும் உலகெங்கும் நடத்தியும் வருகிறார்.
`ஜெயிலர்’, `ஜவான்’ என இடைவிடாமல் இசையமைத்து வந்த அனிருத், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஓய்வு எடுப்பதற்குப் பதில் தனக்கு மகிழ்ச்சியளிக்கும் இசை நிகழ்ச்சிகளுக்கு ஒப்புக்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் அவரது ‘ஹூக்கும்’ இசை நிகழ்ச்சி, அண்மையில் துபாயில் கோலாகலமாக நடந்தது. அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. வரும் மே மாதம் 9ஆம் தேதி மெல்பர்ன் நகரிலும் அதனைத் தொடர்ந்து 11 ஆம் தேதி சிட்னி நகரிலும் அவருடைய இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
‘ஜெயிலர்’ படத்திற்கு பின், ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்திற்கும் கமலின் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ படங்களும் அஜித்தின் ‘விடாமுயற்சி’, விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்ஸுரன்ஸ் கார்ப்பரேஷன்’, சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் எனப் பல படங்கள் இவரின் கைவசம் உள்ளது.
தவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் இசைமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இதில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்னும் சில நாள்கள் மீதம் இருக்கின்றன. ‘வேட்டையன்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.
‘விடாமுயற்சி’க்கு பாடல்கள் கொடுத்துவிட்டார். ‘ஜவான்’ படத்திற்குப் பின், இந்தியில் இன்னமும் படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மே மாதம் இசை நிகழ்ச்சிகள் இருப்பதால் அவற்றை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்திப் படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டாவின் படத்திற்கும் இசையமைக்கிறார். நானியின் நடிப்பில் ‘ஜெர்ஸி’ இயக்குநர் கௌதம் டின்னாநுரி இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
தவிர, ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவாரா’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளதால், ‘தேவரா’வின் இறுதிக்கட்ட வேலைகளும் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கின்றன.
இயக்குநர் தேர்வில் இருக்கும் விஜய்யின் ‘தளபதி 69’ படத்திற்கும் இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்கலாம் என்கிறது விஜய் வட்டாரம். ‘லியோ’வில் பாடல்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.