‘புஷ்பா 2’ உடன் மோதாமல் ‘இந்தியன் 2’வை சிங்கம் போல் சிங்கிளாக திரையிடப்படும் என்கிறார் இயக்குநர் சங்கர்.
‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படம் கடந்த 2018ஆம் ஆண்டே தொடங்கப்பட்டாலும் பல்வேறு தடங்கல்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் படத்தை கைவிடும் நிலைக்கே சென்ற நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் இப்படத்தை கையில் எடுத்தது. லைகா நிறுவனத்துடன் இணைந்து ‘ரெட் ஜெயண்ட்’டும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்தது.
பின்னர் பல ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த படப்பிடிப்பை கடந்த 2022ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கினர். தொடர்ந்து தைவான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு, ஒரு கட்டத்தில் படத்தின் நீளம் கருதி, இப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்து அதற்கான படப்பிடிப்பையும் நடத்தி முடித்துள்ளனர்.
இன்னும் பாடல் காட்சி மட்டும் எஞ்சி உள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என கூறப்படுகிறது.
படப்பிடிப்பு ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் பின்னணி பணிகளையும் தொடங்கி விறுவிறுப்பாக நடத்தி வந்துள்ளார் ஷங்கர். இதனால் ‘இந்தியன் 2’ படம் வெளியிடத் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
முதலில் இப்படத்தை ஆகஸ்ட் 15ஆந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடும் நோக்கத்தில் இருந்த படக்குழு, ‘புஷ்பா 2’ படமும் அதே தேதியில் வெளியாவதால் தற்பொழுது இந்தியன் 2 படத்தை வெளியிடும் தேதியை மாற்றி இருக்கின்றனர்.
அதன்படி தற்போது வெளிவந்துள்ள தகவல்படி, ‘இந்தியன் 2’ திரைப்படம் வருகிற மே மாதம் 23 அல்லது 30ல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
பெரும்பாலும் இப்படம் வேறு எந்த முன்னணி நட்சத்திரத்தின் படங்களும் வெளியாக நேரத்தில் வெளியிடுவதாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பதால், தமிழ்நாட்டில் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இதனால் ‘இந்தியன் 2’ வசூல் வேட்டைக்கு ரெடியாகி விட்டது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.