நடிப்பில் மட்டுமன்றி தொழிலிலும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா

நடிப்பில் மட்டுமன்றி தொழிலிலும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா

3 mins read
68aebb69-d5a0-490f-9f7d-d6a2d99edffb
நயன்தாரா - படம்: ஊடகம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்துவரும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, 2024 ஆம் ஆண்டின் பணக்கார தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். அவரிடம் ரூ.200 கோடி சொத்து; ஆடம்பர வீடுகள், தனியார் விமானம் இருப்பதாக கோலிவுட் திரையுலகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ‘ஐயா’ படத்தில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் 80க்கும் மேலான படங்களில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.

தனது நடிப்புத்திறமைக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

அண்மையில் ‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் பால்கே விருதையும் வென்றுள்ளார்.

இவர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம், தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நாட்டின் பணக்கார பெண் நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு ஏறத்தாழ ரு. 200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு ரூ.100 கோடி மதிப்புள்ள வீடுகள் உள்ளன. தலைநகர் சென்னையைத் தவிர ஹைதராபாத், கேரளா, மும்பை என நாட்டின் முக்கிய நகரங்களில் 4 ஆடம்பர வீடுகளும் நயன்தாராவுக்கு சொந்தமாக உள்ளன.

படங்களில் நடிப்பதையும் தாண்டி கே பியூட்டி, தனிஷ்க் உட்பட பல முக்கிய இந்திய பிராண்டுகளின் முகமாகவும் நயன்தாரா உள்ளார். ஒவ்வொரு விளம்பரத்தில் நடிப்பதற்கும் ரூ. 5 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது.

நயன்தாரா தனக்கென ஒரு பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார். பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட ஆடம்பரக் கார்களும் அவரிடம் உள்ளன.

தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நயன்தாரா நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது.

சாய் வாலே என்ற பிரபலமான நிறுவனத்தில் நடிகை நயன்தாரா ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளார். இதில் இருந்தும் இவருக்கு வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ரெனிதா ராஜனுடன் இணைந்து லிப் பாம் நிறுவனத்தை நயன்தாரா தொடங்கினார். இந்த நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு லிப் பாம் வகைகளைக் கொண்ட முதல் பெரிய பிராண்ட் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் வணிகத்தில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட பங்குகளை நயன்தாரா வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஸ்கின் கேர் நிறுவனம் ஒன்றையும் தனது நண்பருடன் சேர்ந்து இவர் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து Femi 9 என்ற பெண்களுக்கான சானிடரி நாப்கின் பிராண்டையும் அறிமுகம் செய்தார்.

இப்படி திரைப்படங்களில் மட்டுமன்றி, பலதரப்பட்ட தொழில்களிலும் கொடி கட்டிப் பறந்து வருகிறார் நடிகை நயன்தாரா.

குறிப்புச் சொற்கள்