‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (கோட்) படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தளபதி 69 குறித்து எந்த ஓர் அறிவிப்பும் வெளிவரவில்லை.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், கடைசியாக தளபதி 69 படத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியானது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ‘டிவிவி எண்டர்டெயின்மெண்ட்’ அந்தப் படத்தை தயாரிக்கப் போவதாக கூறுகின்றனர்.
ஆனால், இதுவரை யார் இயக்கப்போகிறார் என்கிற எந்த ஓர் அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆரம்பத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் எனக் கூறப்பட்டது.
ஆனால், சில இயக்குநர்களைச் சந்தித்து ரகசியமாக விஜய் தனது 69வது படத்துக்கான கதையைக் கேட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், அட்லீ, தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் உள்ளிட்ட பல இயக்குநர்களின் பெயர்கள் இந்த வரிசையில் அடிபட்டன.
இந்நிலையில், தற்போது ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் கதைகளை விஜய் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரிடமும் கதை கேட்டுள்ள விஜய், முழுக் கதையையும் தயார் செய்து வருமாறு இருவரிடமும் சொல்லி இருக்கிறாராம்.
ஆகையால் ஆர்.ஜே. பாலாஜி அல்லது கார்த்திக் சுப்புராஜ் இவர்கள் இருவரில் ஒருவர்தான் தளபதி 69 படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்.ஜே. பாலாஜியிடம் கதை கேட்டிருப்பது திரையுலகில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘வீட்ல விசேஷம்’ படத்தின் இயக்குநர்களில் ஆர்.ஜே. பாலாஜியும் ஒருவர். கடந்த ஆண்டு அந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, “நடிகர் விஜய்யைச் சந்தித்து கதை சொன்னேன், அது ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தைப் பற்றிய படம்,” என்று தெரிவித்து இருந்தார்..