தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்குகள் வார இறுதியில் மூடப்பட்டிருக்கும் என்று வெளியான தகவல் சினிமா ரசிகர்களை கவலைப்பட வைத்துள்ளது.
முன்னணி நடிகர்களின் புதுப்படங்கள் ஏதும் தற்போது வெளியீடு காணவில்லை. மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்ட படங்கள் எதுவும் அடுத்த இரு வாரங்களுக்கு வெளியாகுமா என்பது தெரியவில்லை.
எனினும், திரையரங்குகளில் கூட்டம் குறைந்ததற்கு இவை இரண்டும்தான் முக்கியமான காரணங்கள் எனக் கூறப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இரவுக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சில திரையரங்குகளில் ஐந்து பேர் கூட படம் பார்க்க வரவில்லை என்று கூறப்படுகிறது.
“தமிழ்த் திரையலகில் வசூல் தரக்கூடிய படங்கள் வெளியாகாத நிலையில், ‘பிரமயுகம்’, ‘பிரேமலு’, ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உள்ளிட்ட மலையாளத் திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
“இதனால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை இருந்தது. அதனால் திரையரங்க உரிமையாளர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.
“இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற இருப்பதால், படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்து காணப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் கவலைப்படுகின்றனர்,” என்று தினமலர் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தற்போது, திரையரங்குகளுக்கு கூட்டத்தை இழுக்கும் ஒரு பிரம்மாண்ட படைப்பு தேவைப்படுகிறது. தமிழ் சினிமா அதிசயங்களை நிகழ்த்தும் ஒரு திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’, கமலின் ‘இந்தியன் - 2’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, விஜய் நடிக்கும் ‘கோட்’, சூர்யாவின் ‘கங்குவா’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரும் கோடை விடுமுறையில் வெளியாகின்றன. அதன் பிறகு திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் திரையரங்குகள் பல திடீரென மூடப்பட்டு வருகின்றன.
போதிய வருமானம் கிடைக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பராமரிப்புச் செலவு, ஊழியர்களுக்கான ஊதியம், புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துவது என திரையரங்க உரிமையாளர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
எனவேதான் திரையரங்குகள் இருந்த இடங்களில் திருமண மண்டபங்கள், மால்கள் கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சினிமா திரையுலகத்தினர் கவலையில் உள்ளனர்.