பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சென்னையில் புதிதாக ஒலிப்பதிவுக் கூடத்தை தொடங்கியுள்ளார். அந்தக் கூடத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று பார்வையிட்டார்.
அந்த சந்திப்பு குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
“இளையராஜா இசையையும் என்னையும் பிரிக்க முடியாது, சிறு வயது முதலே இசைஞானி இளையராஜாவின் இசை எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. நான் இசையமைப்பாளராக வேண்டும் என்கிற கனவை எனக்குள் விதைத்ததும் இளையராஜாவின் இசைதான்,” என்றார் தேவி ஸ்ரீ பிரசாத்.
“நான் இசையமைப்பாளராக மாறியபின் எனது சொந்த ஒலிப்பதிவுக் கூடத்தில் இளையராஜாவின் பெரிய புகைப்படம் ஒன்றை வைத்தேன். அந்த புகைப்படத்தின் முன் இளையராஜாவுடன் ஒரு படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது இப்போது நடந்துள்ளது. இது என் வாழ்க்கையின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று,” என்று அவர் குறிப்பிட்டார்.
தன்னைப் பார்க்க வந்ததற்கு இளையராஜாவுக்கு நன்றி என்றும் தேவி ஸ்ரீ பிரசாத் கூறினார்.