விறுவிறுப்புடன் உருவாகி வருகிறது ‘அரண்மனை 4’ திரைப்படம். வழக்கம்போல் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் களமிறக்கி உள்ளார் இயக்குநர் சுந்தர்.சி. இம்முறை தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
“இதற்கு முன்பு ‘அரண்மனை’ படத்தின் மூன்று பாகங்களை ரசிகர்கள் மனம் கவரும் வகையில் உருவாக்கி உள்ளோம்.
“அவற்றின் மூலம் கிடைத்த பெரும் வெற்றிகளும் அங்கீகாரமும் நீடிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த படக்குழுவின் விருப்பம். எனவே சளைக்காமல் உழைத்திருக்கிறோம்,” என்கிறார் சுந்தர்.சி.’
இவரது படங்களில் எப்போதுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். முந்தைய பாகங்களில் ஹன்சிகா, திரிஷா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருந்தனர்.
“நான்காம் பாகத்தில் தமன்னாவை திரையில் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைவர். காரணம், தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு ஏற்ப தமன்னா வெளிப்படுத்தியுள்ள நடிப்புதான்.
“மிகவும் அருமை என்று சொல்லத்தக்க வகையில் நடித்துள்ளார் தமன்னா. இதற்கு முன்பு அவர் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கலாம். எனினும் இன்னமும்கூட இயக்குநர் சொல்வதற்கு மதிப்பளித்துச் செயல்படுகிறார்.
“எனினும் இப்படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் நடித்துள்ளார்,” என்று தமன்னா புராணம் பாடும் சுந்தர்.சி., இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளாராம்.
கதை நடக்கும் அரண்மனைக்குள் இவர் நுழைந்த பிறகுதான் பிரச்சினைகள் தொடங்குகின்றன. யார் உண்மையான பேய் என்பதை இவர்தான் கண்டுபிடிப்பாராம்.
“அரண்மனைக்குள் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும். ஹிப்ஹாப் தமிழாதான் இசையமைத்துள்ளார்.
“அந்த தம்பியிடம் எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கலாம். அழகழகான பாடல்களுடன் அருமையான பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.
“படத்தின் தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை சிரித்துக் கொண்டே இருந்தால் களைப்பாகிவிடும். எனவே நல்ல நகைச்சுவைக்குப் பிறகு, நல்ல பாடல்கள் இடம்பெறுவது மிகவும் முக்கியம்.
“பொதுவாக ஒரு படத்தில் இடம்பெறும் நல்ல காட்சிகளைத் தொகுத்து முன்னோட்டக்காட்சித் தொகுப்பை உருவாக்குவார்கள். ஆனால் எனக்கு முழுப்படமுமே நல்ல காட்சிகளாத்தான் இருக்க வேண்டும்.
“என்னைப் பொறுத்தவரை நல்ல கதைக்களம், திரைக்கதை, காட்சி அமைப்பு ஆகியவை இருந்தால் படம் வெற்றி பெரும் என உறுதியாக நம்புகிறேன்.
“ஒரு படத்திற்கு திரைக்கதைதான் அச்சாணி. அந்த அச்சாணி இல்லாமல் குடை சாய்ந்த வண்டிகள் ஏராளம்.
“திரைத்துறையில் உச்சத்தை எட்டிப்பிடிக்க கதாநாயகர்களுக்கு எப்போதுமே சில சலுகைகள் தன்னால் அமையும். ஆனால் புதிதாக அறிமுகமாகும் கதாநாயகர்களும்கூட ஒரு படம் குறித்து தயாரிப்பாளர், இயக்குநரிடம் அமர்ந்து பேசுவதில்லை.