நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். அவர்களில் நடிகர் நாசர், கமீலா தம்பதியினரின் மகன் ஃபைசல் நாசரும் ஒருவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் விபத்தைச் சந்தித்தார் ஃபைசல். விபத்தில் படுகாயம் அடைந்து சுயநினைவையும் இழந்தார். ஆனால், விஜய்யை மட்டும் அவரால் அடையாளம் காண முடிந்தது.
“இது குறித்து தகவல் அறிந்த விஜய், உடனடியாக வீடு தேடி வந்து எங்களுக்கு ஆறுதல் கூறினார். ஃபைசலிடமும் பேசி நம்பிக்கையூட்டினார். இன்று என் மகன் மீண்டு வந்து கொண்டிருப்பதற்கு விஜய்யும் முக்கிய காரணம்,” என்று நாசர், கமீலா தம்பதியர் நெகிழ்கின்றனர்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை அறிந்த ஃபைசல், உடனடியாக தாமும் அக்கட்சியில் சேர விரும்பினாராம். தமிழகத்தில் இப்போதுள்ள அரசியல் சூழலில் நல்ல மாற்றம் ஏற்படுவதே தமது விருப்பம் என்று குறிப்பிடும் ஃபைசல், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாராம்.
“விஜய்யை ஏராளமான இளையர்கள் பின் தொடர்கின்றனர். அப்படிப்பட்டவரை முன்மாதிரியாகக் கொண்டு எங்களுடைய மகன் அரசியல் கட்சியில் இணைவதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்,” என்கிறார் கமீலா நாசர்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளதாக கேள்விப்பட்ட உடனேயே, அதில் சேர வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தாராம் ஃபைசல். மகனுடைய விருப்பத்தில் தலையிட தாங்கள் விரும்பவில்லை என்றும் மகனுடைய விருப்பமே தங்கள் விருப்பம் என்றும் நாசர் கூறுகிறார்.
“சமூக நலன் கருதி விஜய் ஒருசில வரிகளில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை சிலர் கிண்டல் செய்துள்ளனர். அவர் இன்னும் முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. அதன் பிறகு அவரது அறிக்கைகள் விரிவாக இருக்கும் என நம்புகிறோம்.
“விஜய் தம்பியை மிக விரைவில் நேரில் சந்திப்பார் ஃபைசல்,” என்கிறார் நாசர்.