விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் ‘ரோமியோ’.
இப்படக் குழுவினர் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்து, பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நாயகி மிருணாளினி பேசும்போது, ‘ரோமியோ’ படம் தனது திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்தப் படத்தில் நடித்ததை வெறும் பட வாய்ப்பாகப் பார்க்கக் கூடாது. அதை சிறந்த பொறுப்பாகவே பார்க்கிறேன்.
“மிருணாளினி என்று, என்னை இயக்குநர் விநாயக் கூப்பிட்டதே இல்லை. நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரான ‘லீலா’ என்றுதான் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார்.
“விஜய் ஆண்டனி பல பணிகளை ஒருசேரக் கவனிக்கக்கூடிய திறமைசாலி. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள இயலும். அதைத்தான் நானும் செய்தேன்,” என்றார் மிர்ணாளினி.
ஒரு கணவனாக, காதலனாக ஒரு ஆணை, பெண் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதுதான் இப்படத்தின் கதைக்கரு என்றார் இயக்குநர் விநாயக்.
“என் அம்மாவை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்தக் கதையை உருவாக்கினேன். எனவே அம்மாவுக்கு நன்றி.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு காதல் கதையை இயக்கப் போவதாகச் சொன்னதும் பலரும் இந்த முயற்சி வேண்டாம் என்றனர்.
“ஆனால் இது வழக்கமான காதல் கதை கிடையாது. வெற்றி பெற்ற மனிதன் தன் வாழ்வில் காதலை இழக்கிறான். அதற்கான காரணம்தான் ‘ரோமியோ’ திரைப்படம்.
“படத்தின் ஓட்டத்தில் பல ஆச்சரியமூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என்பதை விரிவாகச் சொல்லி இருக்கிறோம்,” என்றார் இயக்குநர் விநாயக்.
கதாநாயகன் விஜய் ஆண்டனி பேசும்போது, விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி என்றார்.
“முதன்முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதைப் பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை.
“இது வழக்கமான காதல் கதையாக இருக்காது. தன் வாழ்வில் வரும் பெண்ணை, ஆண் எப்படி அணுக வேண்டும் என்று இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
“நிச்சயம் குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படைப்பாக இருக்கும்,” என்று உறுதியளித்தார் விஜய் ஆண்டனி.
இந்தப் படத்தில் அவர் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அந்தப் பாடல் விரைவில் வெளியிடப்படும் என்றார் இசையமைப்பாளர் பரத் தனசேகர்.
நடிகர் தலைவாசல் விஜய் பேசும்போது, நிகழ்ந்துவிட்ட பெரிய துன்பத்தை தனது மனவலிமையால் கடந்து வந்துள்ளார் விஜய் ஆண்டனி என்றார். அந்த மன வலிமையைத் தாம் பெரிதும் மதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
“மிருணாளினி மிகவும் தன்மையான இளம் நாயகி. மிகவும் நல்ல பெண் என்பேன்.
“இந்தப் படத்தை விளம்பரப்படுத்த என்னையும் அவரையும் வைத்து கிசுகிசு உருவாக்கலாமா என்று முதலில் யோசித்தோம். பிறகு அது சரிப்பட்டு வராது எனக் கைவிட்டோம்.
“எனினும் படத்துக்கு உரிய விளம்பரம் கிடைத்துள்ளது என நம்புகிறோம். ரசிகர்கள் நல்ல வரவேற்பும் ஆதரவும் நல்குவர் என்றும் நம்புகிறேன்,” என்றார் விஜய் ஆண்டனி.


