‘சுழல்’ என்ற இணையத் தொடரில் இணைந்து நடித்த ஐஸ்வர்யா ராஜேஷும் கதிரும் மீண்டும் இந்த தொடரின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இணையத் தொடர்கள் மீதான மக்களின் ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதற்கு ஏற்றாற்போல பல நல்ல கதை அம்சம் கொண்ட இணையத் தொடர்களும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் பிரபல இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் திரைக்கதையில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இணையத் தொடர் ‘சுழல்’.
இந்த இணையத் தொடரில் பிரபல நடிகர் பார்த்திபன், நடிகை ரெட்டி, கோபிகா ரமேஷ், பிரபல நடிகர் கதிர், நடிகை லதா ராவ், மூத்த தமிழ் நடிகர் சந்தான பாரதி, இளங்கோ குமரவேல் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் தங்களுடைய நெருங்கிய உறவினர்களால் கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக முடியும். ஆகவே பெற்றோர் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் ஒரு மிகச்சிறந்த இணையத் தொடராக ‘சுழல்’ திகழ்ந்தது.
இந்த சூழலில் புஷ்கர் மற்றும் காயத்ரி தற்பொழுது அளித்துள்ள தகவலின்படி, அந்த இணையத் தொடரின் இரண்டாம் பாகம் தற்போது முழுவதுமாகத் தயாராகியுள்ளது. இந்த இரண்டாம் தொடரில் முதல் தொடரில் நடித்தவர்களே நடிப்பார்கள் என்று கூறியுள்ளனர்.