அண்மையில் ஜப்பானில் நில நடுக்கம் ஏற்பட்டபோது, இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா அங்குதான் இருந்தார். தங்குவிடுதி ஒன்றின் 28ஆவது மாடியில் இருந்த தம்மால் நில நடுக்கத்தை உணர முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஜப்பானில் கடந்த வாரம் சிறப்புக் காட்சி யாகத் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கேற்க ராஜமெளலியும் மகன் கார்த்திகேயாவும் ஜப்பான் சென்று ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கார்த்திகேயா தங்குவிடுதி அறையில் இருந்தபோது நிலநடுக்கத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம். 28வது மாடியில் இருந்ததால், தரை மெதுவாக அதிரத் தொடங்கியதாம்.
“மிகுந்த அச்சத்தில் இருந்தோம். ஜப்பான் மக்களோ, மழை பெய்வதுபோல் சிறிதும் கலங்காமல் நின்றிருந்தனர். எப்படியோ உயிர் பிழைத்தோம்,” என்று பதிவிட்டுள்ளார் கார்த்திகேயா.
இவர் ‘பிரேமலு’ தெலுங்கு படத்தின் மூலம் விநியோகிப்பாளர் ஆனார். தற்போது இயக்குநரகாவும் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

