மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து முதலில் துல்கர் விலகினார். அவரைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியும் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாள்கள் நடந்தன. பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காரணம், படக்குழு அவரிடம் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் படப்பிடிப்புக்கான தேதிகள் கேட்டிருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனின் வேலைப்பளு காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை என்பதால், அடுத்து வரும் நாள்களில் ஜெயம் ரவியின் மற்ற படப்பிடிப்புகள் இருப்பதால் அவர் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி ‘ஜெனி’, ‘பிரதர்’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக, ‘தக் லைஃப்’ படத்திலிருந்து துல்கர் சல்மான் நாள்கள் பிரச்சினை காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.