தனது திரைப் பயணத்தின் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதாகச் சொல்கிறார் பிரபல பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர்.
இந்தியில் முதலில் நடிக்கத் தொடங்கிய இவர், தற்போது தெலுங்குத் திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுவரை இரண்டு தெலுங்குப் படங்களில்தான் நடித்துள்ளார் மிருணாள். ‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய அவை இரண்டுமே இவருக்கு நல்ல பெயரையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளன.
மிருணாளுக்கு தற்போது 31 வயதாகிறதாம். இன்னமும்கூட கல்லூரி மாணவியைப்போல் இளமைத் துள்ளலுடன் காட்சி அளிப்பதாக ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.
தெலுங்கு ரசிகர்கள் இவரை ‘புன்னகை அரசி’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
இந்நிலையில் இந்த ராணியின் பார்வை தமிழ்த் திரையுலகப் பக்கம் திரும்பி உள்ளது. கோடம்பாக்கத்தில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என விரும்புகிறாராம். கடந்த ஆண்டே இவர் தமிழில் சூர்யாவுடன் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில், சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக மிருணாளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சிறு வயதிலேயே தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளாராம் மிருணாள். பின்னர் இந்தி, மராத்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்று பல கோடி ரூபாய் சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் மிருணாள் தாக்கூருக்கும் இடம் கிடைத்துள்ளது.
ஆனால் தொடக்க காலத்தில் தாம் பல்வேறு சோதனைகளையும் வேதனையையும் கடந்துவர வேண்டியிருந்ததாகவும் புதுமுகமாக இருந்தபோது இந்தித் திரையுலகில் யாரும் தம்மை மதிக்கவே இல்லை என்றும் பேட்டி ஒன்றில் மிருணாள் தெரிவித்துள்ளார்.
“பல பிரபலங்கள் குறித்து ஊடகங்களில் ஏராளமான தகவல்களைப் படித்துள்ளேன். அவர்களை வெகுவாக மதிப்பேன். ஆனால் நேரில் கண்டபோது எல்லாமே நேர்மறையாக இருந்தது.
“அப்பிரபலங்களில் பெரும்பாலானவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நான் அருகே இருந்தாலும்கூட கவனிக்காததுபோல் நடந்து கொள்வார்கள். அவர்களுடைய பேச்சு, நடவடிக்கைகள் என்னை அவமானப்படுத்தும் வகையில் இருக்கும். இத்தனைக்கும் அடுத்த காட்சியில் நான் அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டியிருக்கும்.
“ஆனால் நடிப்பதற்கு முன்பு எவ்வாறு நம்மை உதாசீனப் படுத்தினார்களோ அதே போன்றுதான் நடித்து முடித்த பிறகும் நடந்துகொண்டனர்,” என்கிறார் மிருணாள் தாக்கூர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரையுலக விழாக்கள், படப்பிடிப்பு அரங்குகள் என அனைத்து இடங்களிலும் தம்மை அடியோடு புறக்கணிப்பதிலேயே சிலர் முனைப்பாக இருந்தனர் என்றும் நாளடைவில் இந்தப் புறக்கணிப்பு தமக்குப் பழகிப்போனது என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களுடன் தொடர்புள்ள அனைவருக்கும் இப்போது தாம் நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
ஏனெனில் அவர்கள் தம் மனதை வேதனைப்படுத்தி இருக்காவிட்டால் இன்றுள்ள உயரங்களைத் தம்மால் தொட்டிருக்க முடியாது என்கிறார் மிருணாள்.
“என்னிடம் நேர்மறையாகப் பேசியவர்களுக்கு நன்றி. எதிர்மறையாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து மனதைக் காயப்படுத்தியவர்களுக்கு இரட்டிப்பு நன்றி.
“அவர்கள் அனைவரும் என்னைப் பற்றி கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் என்னைப் புறக்கணித்ததால்தான் அங்கீகாரம் கிடைத்தது.
“இதற்காக கடுமையாகப் போராடினேன். இன்று அவர்கள் என்னைப் புறக்கணிக்க முடியாத இடத்தை எட்டிப்பிடித்துள்ளேன்,” என்று கோபமும் நிதானமும் சரிவிகிதமாக கலந்த குரலில் பேசுகிறார் மிருணாள்.