‘வெப்பம் குளிர் மழை’ என்ற மாறுபட்ட தலைப்புடன் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.
இப்படத்தின் சுவரொட்டி ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன்கூட படக்குழுவினருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
குழந்தையின்மை குறித்து அலசும் வகையில் இந்தப் படம் உருவாகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக குழந்தையின்மை பிரச்சினை சமுதாயத்தில் பெரிதாகி வருவதாகவும் குழந்தைப்பேறு இல்லாத தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர்.
“ஒரு கட்டத்தில் நமக்காக குழந்தையா அல்லது சமுதாயத்தின் நெருக்கடிக்காக குழந்தையா என்கிற குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. இந்தக் குழப்பத்திலேயே இன்று குழந்தைப்பேறு நிகழ்கிறது.
“இரு மனமும் உடலும் இணைவதில்தான் குழந்தைப்பேறு என்பது சுகமாக அமையும். இந்த எல்லையைக் கடந்துசென்று மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெறும் சுமைகள்தான்,” என்று குங்குமம் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கல் வேதமுத்து.
திருமணமான உடனேயே ‘வீட்டில் ஏதேனும் விசேஷம் உண்டா’ என, பார்க்கும் அனைவரும் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். இது இளம் தம்பதியர்க்கு இந்தச் சமுதாயம் கொடுக்கும் மன நெருக்கடி.
“இந்த நெருக்கடிகளை களைந்துவிட்டால் வாழ்க்கை இனிக்கும். இக்கருத்தை ஆழமாகப் பதிவு செய்துள்ளேன்,” என்கிறார் பாஸ்கல் வேதமுத்து.
சங்கர் ரங்கராஜன் இசையமைக்க படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார் திரவ். படத்தொகுப்பு பணியையும் திரவ்தான் கவனித்துக் கொள்கிறாராம். மேலும் பாடல்களையும் எழுதியுள்ளார்.
“எப்படி மழை பெய்வதில் இயற்கை முதன்மைப் பங்கு வகிக்கிறதோ, அதே போல் குழந்தைப்பேறு என்பதும் இயற்கையாக நிகழ வேண்டும்.
“இந்த உண்மையை வலியுறுத்தும் விதமாக எங்கள் படத்தை உருவாக்கி வருகிறோம்,” என்கிறார் பாஸ்கல் வேதமுத்து.