‘சூப்பர் சிங்கர்’ போட்டியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் புண்யா.
தான் நேசித்த இசைக்காக மருத்துவப்படிப்பையும் பூர்வீகமான லண்டன் நகரையும் விட்டுவிட்டு சென்னையில் குடியேறிவிட்டார்.
“நல்ல மருத்துவர் எனப் பெயரெடுக்க வேண்டும் என்பது தவிர வேறு எந்தச் சிந்தனைகளும் எனக்கு இருந்ததில்லை. அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது.
“மன அழுத்தம் காரணமாக மிகுந்த நாள்களைக் கடந்து வந்தபோது, ஏதேனும் மாறுபட்ட முயற்சிகளில் ஈடுபடலாமா என மனம் அலைபாய்ந்தது. இனி மருத்துவப் படிப்பில் கவனம் இருக்காது என்பதும் புரிந்தது.
“அப்போதுதான் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி குறித்து அம்மா சொன்னார். எனவே எனக்குக் கிடைக்கும் புகழ், பணம் அனைத்துமே அம்மாவுக்கு உரியது,” என்கிறார் புண்யா.
பாடுவது என முடிவானதும் லண்டனில் இருந்து பறந்து வந்து பாடல் தேர்வில் பங்கேற்றாராம்.
அப்போது ஆறு மாதங்கள் சென்னையில் வசித்தபோது, தான் அனைத்தையும் கடந்து இசையை நேசிப்பதை உணர்ந்தாராம்.
“சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்ததும் அம்மாவைப் பார்க்க லண்டனுக்கு ஓடினேன். ஆனால் அடுத்த இரண்டு மாதங்களில் அவர் இறந்துபோனார்.
“இப்போது சென்னையிலேயே குடியேறிவிட்டேன். அம்மா காலமாகிவிட்டார். எனினும் அவரது ஆசியால் நிறைய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.
“நான் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அம்மாவின் ஆசை. அதை நோக்கி எனது பயணம் நீடிக்கும்,” என்கிறார் புண்யா.
தற்போது ‘சூப்பர் சிங்கர்’ குழு தமக்கு உறுதுணையாக இருப்பதாகக் குறிப்பிடுபவர், போட்டியில் பங்கேற்கும் பாடகர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பு தமக்கு கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
“மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது நானும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைப்பது எனக்கும் மகிழ்ச்சியாகவே உள்ளது.
“மேலும், பிரபல இசையமைப்பாளர்களுக்குப் பாடுவதற்கான வாய்ப்புகளும் தேடி வருகின்றன. தவிர, நிறைய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.
“அம்மாவின் ஆசையே என்னுடைய லட்சியம் என அதை நோக்கிச் செல்வதுதான் அவரது ஆன்மாவுக்கு மனநிறைவை அளிக்கும் என நம்புகிறேன்,” என்கிறார் புண்யா.