முதன்முறையாக இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள ‘கிளவர்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
உலக அளவில் இது போன்ற முயற்சியில் இதுவரை யாரும் ஈடுபட்டதில்லை என்று இப்படக் குழுவினர் கூறுகின்றனர்.
படத்தின் தொடக்கம் முதல் இறுதிக்காட்சி வரை இரு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. மதுரையில் முக்கியமான காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். ரகுநாத் இசை அமைக்க, செந்தில் குமார் இயக்கியுள்ளார்.
“கதைப்படி, மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்படும் ஒரு நாய்க்குட்டியை அதன் தாயிடம் இருந்து ஒரு சைக்கோ திருடிச் சென்று விடுகிறான்.
“அந்த நாய்க்குட்டியை மீட்க அதன் தாய் எப்படியெல்லாம் பாடுபடுகிறது, குட்டி நாயைக் கண்டுபிடிக்க முடிந்ததா என்கிற ரீதியில் கதை நகரும்.
“படம் முழுவதும் விறுவிறுப்பான, உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த இரண்டு நாய்களைத் தவிர வேறு எந்த கதாபாத்திரத்தையும் திரையில் பார்க்க இயலாது.
“இதுபோன்ற மாறுபட்ட கதைக்களத்தில் நல்ல வணிகப்படமாக உருவாகிறது ‘கிளவர்’. இந்த முயற்சிக்கு ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குநர் செந்தில்குமார் சுப்பிரமணியன்.’