தமிழ்த் திரையுலகில் மீண்டும் கதாநாயகிகள் இடையே மறைமுகப் போட்டி தொடங்கி உள்ளது.
முன்பு அதிக வாய்ப்புகளைப் பெறுவதற்கு போட்டியிட்ட நிலை மாறி, தற்போது யார் அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்ற போட்டி வலுத்து வருகிறது என்கிறார்கள் திரையுலக விவரப்புள்ளிகள்.
இந்தப் போட்டியில் திரிஷா முதலிடத்தில் உள்ளார். ‘லியோ’ படத்திற்கு முன்பு ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த அவர், தற்போது 12 கோடி ரூபாய் ஊதியம் கேட்கிறாராம்.
‘ஜவான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான நயன்தாராவும் முன்பு ரூ.5 கோடி ஊதியம் பெற்றார். ஆனால் ‘ஜவான்’ படத்தின் வசூல் ரீதியிலான வெற்றிக்குப் பிறகு அவரது சம்பளம் இரட்டிப்பானது.
இந்நிலையில், நயன்தாராவை முந்திச்சென்று முதல் இடத்தைப் பிடித்துள்ளார் திரிஷா என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் தற்போது ரூ.12 கோடி ஊதியம் கேட்கிறார்.
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’, விஜய்யுடன் நடித்த ‘லியோ’ ஆகிய படங்களுக்குப் பிறகு திரிஷாவின் மதிப்பு உச்சத்திற்கு சென்றுள்ளது.
அதன் பலனாக, அஜித்துடன் ‘விடாமுயற்சி’, சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’, மோகன் லாலுடன் ‘ராம்’, நிவின் பாலியுடன் ‘ஐடென்டிடி’, கமலுடன் ‘தக் லைஃப்’ என ஐந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் திரிஷா.
“இந்தப் படங்கள் வசூல் ரீதியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றால் கோடம்பாக்கத்தில் உள்ள இரண்டாம் நிலை கதாநாயகர்களைவிட திரிஷாவின் ஊதியம் அதிகரித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை,” என்கிறார்கள் திரையுலகப் புள்ளிகள்.