விஜய்யுடன் நடித்து வரும் இளம் நாயகி மீனாட்சி சௌத்ரி அண்மையில் குத்துச்சண்டைப்பயிற்சி பெற்றுள்ளார். இதற்காக அண்மையில் தாய்லாந்து சென்று திரும்பியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் மீனாட்சி. கடந்த 2019ஆம் ஆண்டு இந்திப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் 2023ஆம் ஆண்டு கோடம்பாக்கத்துக்கு வந்தார். விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘கொலை’ படத்தில் நடித்தார் மீனாட்சி.
மேலும் ஆர்.ஜே.பாலாஜி நடித்த ‘சிங்கப்பூர் சலூன்’ படத்திலும் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் அமைந்தது. இந்நிலையில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையும் என தாம் கற்பனைகூட செய்ததில்லை என்கிறார் மீனாட்சி.
அண்மையில் சில நாள்கள் ஓய்வு கிடைத்ததை அடுத்து தனது தாயாருடன் தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டாராம். சில நாள்கள் அங்குள்ள பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணியாக சுற்றித் திரிந்தபோது அங்கு குத்துச்சண்டை பயிற்சி அளிக்கப்படுவது குறித்து சில தகவல்கள் கிடைத்ததாம்.
உடனடியாக ஒரு பயிற்சி மையத்திற்குச் சென்று கூடுதல் தகவல்களைத் திரட்டியதோடு அல்லாமல், உடனடியாக பயிற்சியிலும் சேர்ந்து விட்டார் மீனாட்சி.
“தாய்லாந்தில் இந்தக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஏனெனில், இந்தப் பயிற்சியை அளிக்கும் பயிற்சியாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள்.
“எனக்கும் அதுபோன்ற திறமையான பயிற்சியாளர் அமைந்தார். அவர் பயிற்சி அளித்த விதமும் பல்வேறு நுணுக்கங்களைச் சொல்லித்தந்த விதமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. பயிற்சியில் நான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அவர் கூறியபோது பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்,” என்கிறார் மீனாட்சி சௌத்ரி.
இந்நிலையில் அவர் எதற்காக இவ்வாறு பயிற்சி மேற்கொண்டார் என்று கேள்வி எழுப்பி உள்ளனர் விஜய் ரசிகர்கள்.
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு ஆரூடத் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ‘கோட்’ படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகமாக இடம்பெறுவதாகவும் அவற்றில் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால் மீனாட்சி சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு தரப்பினரோ, 26 வயதே ஆன மீனாட்சி, தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதால் தனிப்பட்ட வகையில் குத்துச்சண்டைப் பயிற்சி பெற்றி ருப்பதாகக் கூறுகின்றனர்.
பல் மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள மீனாட்சி, நடிகையான பின்பும்கூட மாடலிங், விளம்பரத் தொழில் ஆகியவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார்.
“நான் முதன்முதலாக ‘அவுட் ஆஃப் லவ்’ என்ற இணையத்தொடர் மூலம்தான் திரைத்துறையில் அறிமுகமானேன். அதன் பின்னர் மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து முடித்த பிறகே என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள தெலுங்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
“ஆனால் தமிழில் எனது முதல் திரைப்படமான ‘கொலை’ வெளியீடு கண்ட உடனேயே தமிழ் ரசிகர்கள் என்னைப் பாராட்டி உற்சாகம் அளித்தனர். இப்போது ரசிகர்களின் ஆதரவுடன் விஜய்யுடன் நடித்து வருகிறேன்,” என்கிறார் மீனாட்சி சௌத்ரி.
தாய்லாந்தில் பயிற்சி பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப் படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார் மீனாட்சி. அவற்றை தமிழ் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிர்ந்து வருகின்றனர்.
மீனாட்சி அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து புதுத் தகவல் எதுவும் வெளியாகவில்லை. விஜய்யுடன் இணைந்து நடிக்கும் படம் வெளியான பிறகே வாய் திறப்பாராம்.
“விஜய் படங்கள் எப்படியும் வெற்றி பெரும் என்பது எல்லாருக்கும் தெரியும். படத்துக்கு படம் வசூல் அதிகரித்து வருகிறது.
“வசூலில் புதிய சாதனையை நிகழ்த்துகிறாரா என்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும். எனவே ‘கோட்’ படம் வெளியீடு கண்டபிறகு அடுத்த படம் குறித்து மீனாட்சி யோசிப்பார். அதுதான் சரியான நகர்வாக இருக்க முடியும்,” எனக் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.