பாலிவுட்டில் வில்லனாக நடித்திருக்கும் பிருத்விராஜுக்குத்தான் அதிக வசனங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார் அந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அக்சய் குமார்.
பாலிவுட்டில் அக்சய் குமாரும் டைகர் ஷெராப் இருவரும் இணைந்து நடித்துள்ள ‘படே மியான் சோட்டே மியான்’ திரைப்படம் இம்மாதம் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ராணுவ பின்னணியில் அதிரடி சண்டைப் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் மலையாள நடிகர் பிருத்விராஜ். ஏற்கெனவே இந்தியில் மூன்று படங்களில் வில்லனாகத்தான் நடித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் வெளியான இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியில் வித்தியாசமான இரும்பு முகமூடி அணிந்த ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதே சமயம் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய அக்சய் குமார், “படத்தின் நாயகர்களான எங்கள் இருவரைவிட வில்லன் பிருத்விராஜுக்குத்தான் அதிக வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
“இந்தப் படம் வெளியாகும்போது அவரது வசனங்கள்தான் ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும்,” என்று பிருத்விவிராஜ் முன்னிலையிலேயே அவரைப் புகழ்ந்தார் அக்ஷய் குமார்.

