‘அரண்மனை’ படத்தின் நான்காம் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி உள்ளார் சுந்தர்.சி.
இதையடுத்து, இப்படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, படம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பட நாயகிகளில் ஒருவரான தமன்னா, சுந்தர்.சி படம் என்றால் எதுகுறித்தும் யோசிக்காமல் அதில் நடிக்க ஒப்புக்கொள்ளலாம் என்றும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“சுந்தர்.சி.யும் குஷ்புவும் எங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போன்றவர்கள். காரணம், என்னை அந்த அளவுக்கு நன்றாகப் பார்த்துக்கொண்டனர். இதுபோன்ற அன்புடன் ஒப்பிடுகையில் பணம், வாய்ப்பு எல்லாமே பிறகுதான்.
“சுந்தர்.சி. இயக்கும் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால் உடனடியாக ஒப்புக்கொள்வேன். அவரைப் போன்று திட்டமிட்டுச் செயல்படக்கூடிய திறமையான இயக்குநர்கள் குறைவு,” என்றார் தமன்னா.
‘அரண்மனை’ படத்தின் முதல் பாகம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து இரண்டாம் பாகம் 2016ல் வெளியீடு கண்டது.
தொடர்ந்து, 2021ல் மூன்றாம் பாகத்தையும் இயக்கி வெளியிட்டார் சுந்தர்.சி. இந்நிலையில், தற்போது ‘அரண்மனை’ நான்காம் பாகமும் உருவாகி உள்ளது. படத்தை இயக்குவதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார்.
“சமுதாயத்தின் அனைத்து தளங்களிலும் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் பெரும் பங்காற்றி வருகின்றனர் சுந்தர்.சி.
தொடர்புடைய செய்திகள்
“அந்த வகையில் தனது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார் சுந்தர்.சி. இம்முறையும் நல்ல கதை, திரைக்கதை மூலம் எல்லாரும் ரசிக்கக்கூடிய ஒரு படத்தை ரசிகர்களுக்குத் தரப் போகிறார்.
“குஷ்புவைப் பொறுத்தவரை திரையுலகம், அரசியல் களம் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவரை எனக்கான முன்மாதிரியாகப் பார்க்கிறேன்,” என்று குறிப்பிட்ட தமன்னா, இப்படத்தின் மற்றொரு நாயகியாக ராஷி கண்ணாவையும் பாராட்டத் தவறவில்லை.
இருவரும் ஏற்கெனவே தெலுங்குப் படத்தில் இணைந்து நடித்ததாகக் குறிப்பிட்ட அவர், அருமையான சக நடிகை என்றும் தெரிவித்தார்.
“ராஷி கண்ணாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அதைவிட அவர் உண்மையான அக்கறையுடன் பேசிப் பழகக் கூடியவர். என் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்,” என்றார் தமன்னா.
‘அரண்மனை 4’ படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் திரைகாண உள்ளது.
முதல் மூன்று பாகங்களைவிட ‘அரண்மனை 4’ மேலும் சிறப்பாக இருக்கும் என்கிறார் ராஷி கண்ணா.
“நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், அருமையான பாடல்கள் என ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
“தமன்னாவுடன் தெலுங்கு படத்தில் இணைந்து வேலை செய்துள்ளேன். இப்போது தமிழிலும் இணைந்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. படம் எதிர்பார்த்ததைவிட ரசிக்கும் படைப்பாக உருவாகி உள்ளது,” என்றார் ராஷி கண்ணா.
இதற்கிடையே ‘அரண்மனை 4’ படத்துக்காக தாம் வழக்கம்போல் மெனக்கெட்டதாகச் சொல்லும் சுந்தர்.சி. ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருப்பதாகக் கூறுகிறார். ரசிகர்கள் இந்தப் படம் குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.

