ஹரி இயக்கத்தில் விஷால்-பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் இம்மாதம் 26ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஷால் அண்மைய பேட்டியில் வரலட்சுமியின் திருமண நிச்சயதார்த்தம், அவரது திரையுலக வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வரலட்சுமியை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாகக் கூறியவர், “தமிழைத் தாண்டி தெலுங்கு திரையுலகிலும் மிகப்பெரிய நடிகையாக உள்ளார். ‘திமிரு’ படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பை பார்த்து அசந்துபோனது போலவே, அண்மையில் ‘ஹனுமன்’ படத்தில் நடித்திருந்த வரலட்சுமியின் நடிப்பை பார்த்தும் வியந்துபோனேன். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
“அவர் தன்னுடைய திரையுலகப் பயணத்தையும் மீறி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார் விஷால்.
நடிகை வரலட்சுமிக்கும் அவரது நீண்ட நாள் காதலரான நிக்கோலஸ் என்பவருக்கும் அண்மையில் நடந்த திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
இதனிடையே, நடிகை வரலட்சுமி நடித்துள்ள ‘சபரி’ திரைப்படம் வரும் மே மாதம் 3ஆம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்தில் நாயகியாகவும் வில்லியாகவும் வரலட்சுமி நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.