ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அறிவழகனும் நடிகர் ஆதியும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு அறிவழகன் இயக்கிய ‘ஈரம்’ என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தார் ஆதி. இப்போது அறிவழகனின் இயக்கத்தில் உருவாகும் ‘சப்தம்’ என்ற படத்தில் அவர்தான் நாயகன்.
இப்படத்தில் நடிக்கும்போது தாய் வீட்டுக்குத் திரும்பிய ஓர் உணர்வு ஏற்படுவதாகச் சொல்கிறார் ஆதி.
“நானும் அறிவழகனும் நெருக்கமான நண்பர்களாகி விட்டோம். எனவே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். அதனால் இந்தக் கூட்டணிப் பயணம் இனிமையானதாகவும் தங்கு தடைகள் இன்றியும் நிகழ்ந்துள்ளது,” என்கிறார் ஆதி.
இந்தப் படத்தில் நடித்தபோது தாம் எதிர்கொண்ட சுவாரசியமான அனுவபங்களை, அண்மைய பேட்டி ஒன்றில் அவர் விவரித்துள்ளார்.
“இப்படத்தின் உருவாக்கத்தில் ஒளிப்பதிவு முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஒளிப்பதிவாளர் அருண் ஒவ்வொரு காட்சியையும் அழகாக செதுக்கியுள்ளார்.
“கதைப்படி, நான் குறிப்பிட்ட ஒரு காரில் தொடர்ந்து பயணம் மேற்கொள்வேன். எனவே காருக்குள் ஒளி அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அவர் துல்லியமாக கணக்கிட்டு அதன்படி காட்சிகளைப் படமாக்கினார்.
“ஒவ்வொரு காட்சியிலும் காருக்குள் இருக்கும் விளக்குகளை அணைத்து, மீண்டும் போடும் பொறுப்பை என்னிடமே கொடுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் ஒளிப்பதிவை ஒழுங்கு செய்ய பயன்படுத்தப்படும் தெர்மக்கோல் அட்டையையும் என் கைகளில் கொடுத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று சொல்லி சிரிக்கிறார் ஆதி.
ஒரு படத்தின் கதாநாயகனே ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றியது இப்படத்திற்காகத் தான் இருக்கும் என்று சொல்பவர், இப்படத்துக்காக மும்பையில் படமாக்கப்பட்ட காட்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறார்.
மும்பையில் மழைக்காலத்தின்போது படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தனராம். எனினும் படக் குழுவினர் அங்கு சென்றபோது அவர்கள் எதிர்பார்த்த வானிலை நிலவவில்லை.
இதையடுத்து, நேரத்தை வீணடிக்காத ஒளிப்திவாளர் அருண், குளிர் காலத்தில் பயன்படுத்தும் உடைகளை அணியுமாறு ஆதியிடம் கூறினாராம். பிறகு பனி படர்ந்த சூழலைக் காட்சிப்படுத்த ஏதுவாக புகையை பரவச் செய்யும் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
“அக்காட்சிகளைப் பார்க்கும்போது மிக இயற்கையாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். ஆனால் குளிர்கால உடைகளை அணிந்திருந்ததால் எனக்கு உள்ளுக்குள் வியர்த்துக்கொட்டியது. மேலும் புழுக்கத்தை மறைத்து குளிரில் வாடுவதுபோல் நடித்தேன்,” என்கிறார் ஆதி.
இப்படத்தில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றியது மாறுபட்ட அனுபவத்தை தந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், லட்சுமி நல்ல தோழியாக, வெளிப்படையாகப் பேசும் பெண்ணாக உள்ளார் என்கிறார்.
“கேமரா முன் நின்றுவிட்டால் கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அப்போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு அசாதாரணமானது. அவரைப் போன்ற கலைஞருடன் இணைந்து பணியாற்றுவது மிக எளிது,” என்கிறார் ஆதி.
இப்படத்தில் நடிகைகள் சிம்ரன், லைலா ஆகியோரும் நடித்துள்ளனராம். அவர்களுடன் திரையைப் பகிர்ந்துகொண்டது நல்ல அனுபவமாக இருந்தது என்கிறார் ஆதி.
முன்பு வெளியான ‘ஈரம்’ படத்தில் ஒரு பேய் கதாபாத்திரத்தை தண்ணீருடன் ஒப்பிட்டிருப்பார் இயக்குநர் அறிவழகன்.
தற்போது ‘சப்தம்’ படத்தில் ‘ஒலி’யைக் கொண்டு மிரளச் செய்வாராம்.
“இப்படத்தை திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் கிட்டும். அதே சமயம் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்புடனும் சுவாரசியமாகவும் நகரும்,” என்கிறார் ஆதி.