தான் குடித்த பழ ரசத்தில் விஷம் கலந்திருந்திருந்ததாக புகார் அளித்துள்ளார் மன்சூர் அலிகான்.
வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வந்தார். அப்போது நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னதை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து சென்னை கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பிய போது ஓர் இடத்தில் கட்டாயப்படுத்தி என்னை பழ ஜூஸ் குடிக்க சொன்னார்கள். அதன் பிறகு மோர் கொடுத்தார்கள்.
அவற்றைக் குடித்த உடனே மயக்கம் வந்தது. அடி நெஞ்சு தாங்க முடியாத அளவுக்கு வலித்தது. உடனே என்னை பாலாறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுத்தார்கள். ஆனாலும் வலி அதிகமாகவே இருந்தது.
அதன் பிறகு தான் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தார்கள். அதன் பின்னரே எனது நெஞ்சு வலி குறைந்தது.
மன்சூர் அலிகானுக்கு நுரையீரல் வலி போக விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டதாகவும் அதன் பிறகே வலி குறைந்ததாகவும் அதன் பின்னர் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.