விஜய்யுடன் நடிக்கும் அஜ்மல், மங்காத்தாவைவிட ‘கோட்’ படம் மிரட்டும் வகையில் எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
‘மங்காத்தா’ படத்தில் அஜித் மற்றும் அவரது குழு தரமான சம்பவம் செய்திருப்பார்கள். அந்தப் படத்தில் பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின் என அந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்திருப்பார் வெங்கட் பிரபு.
அதைவிடச் சிறப்பாக ‘கோட்’ படத்தில் தளபதி விஜய்யின் குழு இருக்கும் என்றும் அதிலும் அந்த அளவுக்குச் சம்பவத்தை வெங்கட் பிரபு செய்து இருக்கிறார் என்றும் அஜ்மல் ரசிகர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
படத்துக்கே ‘கோட்’ என தலைப்பு வைத்துள்ள வெங்கட் பிரபு நிச்சயம் கருப்பு ஆடு ஒன்றைப் படத்தில் வைத்திருப்பார். அந்தக் கருப்பு ஆடே அஜ்மலாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
‘விசில் போடு’ பாடலில் அஜ்மல் ஆடும்போது மற்ற நடிகர்கள் கண்டுக்காமல் விட்டு அசிங்கப்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல் என யார் முக்கிய வில்லனாக இருக்கப் போகின்றனர் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நிச்சயம் அஜ்மலுக்கு ‘கோ’ படத்திற்குப் பிறகு தரமான படமாக ‘கோட்’ இருக்கும் என அவரும் உறுதியாக நம்பி காத்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி எப்படியும் அந்த ரகசியம் அம்பலமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.