‘மைக்’ மோகன் என்று அழைக்கப்படும் மோகன் தான் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் வெற்றி பெற்றதற்கு இளையராஜாவே காரணம் என்று புகழ்ந்துள்ளார்.
தமிழில் பல வெள்ளிவிழா படங்களில் நடித்திருக்கும் மோகன், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஹரா’.
படத்தை விஜய்ஸ்ரீ இயக்கி இருக்கிறார். அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், வனிதா விஜயகுமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், சந்தோஷ் பிரபாகர், அனித்ரா நாயர் நடித்துள்ளனர்.
ரஷாந்த் அர்வின் இசை அமைக்க, பிரகத் முனியசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து மோகன் பேசியபோது, “நான் நடித்துள்ள படங்களை நினைவில் வைத்துக்கொள்ள மாட்டேன். ‘ஹரா’ எனக்கு முதல் படம் மாதிரிதான்.
“நான் உச்சநிலையில் இருந்தபோது, ஏராளமான புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்தேன். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் வெறியுடன் உழைப்பார்கள்.
“எனக்குரிய பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்ததற்குக் காரணம் இளையராஜா. யாருக்கும் வஞ்சனை இல்லாமல் இசை அமைத்துக் கொடுப்பார்.
“எல்லா நடிகர்களுக்கும் ஒரேமாதிரி பாடல்களை வழங்கியுள்ளார். அப்பாடல்களில் என்னை ரசிக்கிறார்கள் என்றால், அதை ஆர்.சுந்தர்ராஜன் போன்ற இயக்குநர்கள் இயக்கியதுதான் காரணம்.
எப்போதுமே என் மார்க்கெட் பற்றி யோசிக்க மாட்டேன். ஒரு படம் முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். இயக்குநர் விஜய்ஸ்ரீயிடம் கதையில் சில சந்தேகங்கள் கேட்டேன். அதையெல்லாம் அவர் மாற்றிப் படமாக்கியுள்ளார்.
மூன்று பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். மணிவண்ணன் மாதிரி அறிவு கொண்டவர் விஜய்ஸ்ரீ. மணிவண்ணன்தான் தாளில் கதை, வசனம் எழுதாமலேயே படத்தை சிறப்பாக உருவாக்கிக் கொடுப்பார்.