மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் ஆடுஜீவிதம்.
இப்படம் 25 நாள்களில் ரூ.150 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆடுஜீவிதம் திரையிடும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் இன்னும் அலைமோதுவதாக படக்குழு கூறியது.
படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குனர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.
இந்தப் படத்துக்காக பிருத்விராஜ் கிட்டத்தட்ட 30 கிலோ எடையை குறைத்ததும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 ஆண்டுகளாக நடந்தது. படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன.
படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்தார். கடந்த மாதம் 28ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியானது.
மலையாளத்தில் மிகவும் புகழ் பெற்றது ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்). அது உண்மை சம்பவத்தை அடிப்படையாக எழுதப்பட்ட நாவல். அது தற்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது.
நஜீப்புக்கு உதவிய பிரித்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான்
படம் வெளியாவதற்கு முன்னர் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நஜீப் குறித்து படக்குழு சில தகவல்களை வெளியிட்டு வந்தது.
இந்நிலையில் ஆடுஜீவிதம் படக்குழுவினர் நஜீப்புக்கு பொருளாதார ரீதியாக எந்த உதவியும் செய்யவில்லை என சமூக ஊடகங்களில் கடந்த சில நாள்களாக குறைகூறப்பட்டு வந்தது. ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ளார் நஜீப்.
“படத்தின் நாயகன் பிரித்விராஜும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் எனக்கு அதிக அளவில் உதவி செய்திருக்கிறார்கள். தாங்கள் செய்யும் உதவியை வெளியே சொல்ல வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் காரணமாகவே அந்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருந்தேன்,” என்றார் நஜீப்.