ரஜினி நடிக்கும் 171வது படத்திற்கு ‘கூலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளித் தொகுப்பை படக்குழுவினர் திங்கட்கிழமை வெளியிட்டனர்.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசை அமைக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள காணொளித் தொகுப்பு ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
கிடங்கு ஒன்றில் சில சமூக விரோதிகள் தங்கக்கட்டிகள், நகைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை அடுக்கிக் கொண்டிருக்க, திடீர் என அங்கு வருகிறார் ரஜினி.
வழக்கம்போல் எதிரிகளை அவர் துவம்சம் செய்துவிட்டு அங்குள்ள நகைகளின் மீது படுத்தபடி ஸ்டைலாக ஒரு வசனத்தைப் பேசுகிறார்.
அந்த வசனமும் அதற்கேற்ப ரஜினி பெரிதாகச் சிரிப்பதுமாக இருக்கும் காட்சி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினி வில்லனா அல்லது வில்லத்தனம் கொண்ட கதாநாயகனா என்பது தெரியவில்லை என்றும் ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ‘சம்போ சிவ சம்போ’ எனத் தொடங்கும் பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகள் ‘கூலி’ படத்தில் பயன்படுத்தப்பட உள்ளன.
அந்த வரிகளை சொல்லியபடியே வில்லனின் அடியாள்களை பந்தாடுகிறார் ரஜினி. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி நடித்த ‘தங்க மகன்’ படத்துக்காக இளையராஜா இசையமைத்த ‘வா வா பக்கம் வா’ பாடலும் ‘கூலி’யில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் மட்டுமே முதல் காணொளியில் இடம் பெற்றுள்ளன.
மொத்தத்தில் ‘கூலி’ குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பில் பழைய ரஜினியைப் பார்த்து பரவசம் அடைய முடிவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இந்தக் காணொளி இணையத்தில் வெளியான குறுகிய காலத்துக்குள் மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
தற்போது நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் காணொளிகளுக்குத்தான் இணையத்தில் அதிக வரவேற்பு கிடைப்பதாக அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். அதை விஞ்சும் வகையில், ‘கூலி’ பாடல்களை ரஜினி ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.